ஓ..தேவ
மனிதனே
பேய்குளம் என்ற ஊரில் இருந்து கருங்குளம் வர சுமார் இருபது மைல் .
பேய்குளத்தில் இருந்து நேராக வடக்கு நோக்கி கருங்குளம் செல்லும் பாதையில் நடந்து
போனால் சுமார் நான்கு மணி நேரத்தில் கருங்குளம் போய் சேரலாம்.இடையில் எதாவது மாட்டுவண்டி
வந்தால், அதில் இடம் இருந்தால் , அதில் ஏறிக்கொள்ளலாம். மேலும் நம்மைப் போல நடந்து
சென்று கொண்டிருக்கும் யார் கூடயாவது பேசிக்கொண்டே போனால் தூரம் கடந்து போவது தெரியாது.
அன்று பால் பிரசிங்கியார் பேய்குளம் சாலையில் வடக்கு நோக்கி நடந்து வந்து கொண்டிருந்தார்.பேய்குளத்தில்
இருந்து கருங்குளம் வழியாக திருவைகுண்டம் போகும்பேருந்து அன்று வரவில்லை.காலையில் எட்டுமணிக்கு
வரக்கூடியது.ஏனோ வரவில்லை
பால்பிரசங்கியாருக்கு பேய்குளத்தில் ஒரே ஒரு விசுவாசிதான் மிக நல்ல அறிமுகம்.
அவர் பெயர் சங்கரவேல் பேய்குளத்தில் கிழக்குபக்கம் உள்ள சலவைத் தொழிலாளிகள்
குடியிருப்பில் வாழ்கிறார்.
பெந்தேகோஸ்தே இயக்கம் வளர துவங்கிய
காலத்தில்
சமுதாயத்தில் தங்களை மேல்ஜாதிக்காரர்கள் என்று கூறிக்கொள்பவர்கள் யாரும் பெந்தேகோஸ்தே
ஆராதனையில் கலந்து கொள்வது கிடையாது.
ஆனால் பாவப்பட்ட எளிய மக்கள் இயேசுவை ஏற்று கொண்டு அவர்களுக்கு தெரிந்த அளவு
ஆராதனை செய்தார்கள்.
பெந்தேகோஸ்தே கூட்டத்தாரை தாலியறுத்தான்
வேதக்காரர்கள் என்றும், அவுத்து போட்டுகொண்டு ஆடுகிறவர்கள் என்றும் ஏளனமாக பேசி எள்ளி
நகையாடிய காலம் அது.
சங்கரவேல் ஆண்டவரை ஏற்றுக்கொண்ட விதம் வித்யாசமானது.
ஒருநாள் வெள்ளாவியில் வைத்து அவித்த துணிகளை குட்டையில் உள்ள தண்ணீரில் போட்டு
அலசிக் கொண்டிருந்தான்.
திடிரென்று அடிவயிற்றில் ஏதோ சுருட்டி இழுப்பதுபோல வலி.
துடித்து தண்ணீருக்குள் விழுந்து விட்டான்.
பக்கத்தில் குளிக்க வந்தவர்களும் மற்றவர்களும் சங்கரவேலை இழுத்து கரையில் போட்டனர்.
சங்கரவேல் வலியால் துடித்துக் கொண்டிருந்தான்.
சங்கரவேலை காப்பாற்றிய மேல்ஜாதிக்காரர்கள் …இவ்வளவு செய்ததே பெரிய விஷயம் என்று
சொல்லிவிட்டு போய் விட்டனர்.
சங்கரவேல் ஈரத்துடன் தரையில் சுருண்டு படத்துகிடந்தான்.
எங்கெல்லாமோ அலைந்து விட்டு முகம் கழுவுவதற்காக அந்த பக்கம் வந்தார் பால்பிரசங்கியார்.
சங்கரவேலை பார்த்தவுடன் அருகில் சென்று அவனை பார்த்தார்.
சங்கரவேலுக்கு ஏதோ பிரச்சனை என்று மட்டும் தெரிந்தது.அவனிடம் எதுவும்கேட்காமல்..,
சங்கரவேலின் தலையில் வலது கையை வைத்து…
ஆண்டவரே இந்த மகனை குணமாக்கும் என்று இரண்டு வார்த்தைகள் சொல்லி இயேசுவின் நாமத்தில்…………………..என்று
முடிக்குமுன் சங்கரவேல் எழுந்து உட்கார்ந்து விட்டான்.
வேதனை போன இடம் தெரியவில்லை.
பால்பிரசங்கியாரின் கால்களில் நெடுஞ்சாண்கிடையாய் விழுந்தான்.
பால்பிரசங்கியார் அவனைத்தூக்கி மனிதர்களை வணங்குவது பாவம்.
நீ ஆராதிக்க ஒருவர் உண்டு .அவர் பெயர் இயேசு கிறிஸ்து என்று கூறினார்.
சங்கரவேலு அவரிடம் இரகசியமாய் ஒன்று கேட்டான் .
என்னை எப்படி குணமாக்கினீர்கள் ….என்று .
பால் பிரசங்கியார் அவனிடம்
இயேசுகிறிஸ்துவின் பெயரை சொல்லி ஸ்தோத்திரம் சொன்னால் நோயும்
பேயும் பறந்து விடும் என்று கூறினார்.
சங்கரவேல் அவரிடம் மிகவும் பணிவுடன் நடந்து கொண்டான்.
தன் விட்டிற்கு அழைத்துச் சென்றான்.தன் மனைவியிடம் தனக்கு நடந்ததை ரொம்ப மிகைப்படுத்தி
கூறினான்.
தான் இரத்தமாக வாந்தி எடுத்ததாகவும் ,
வலிப்பு வந்து கரையில் இழுத்துகொண்டு கிடந்ததாகவும் பால்பிரசங்கியார் வந்து
அவனை பார்த்து….
சீ.. எழும்பு……என்று அதட்டினதாகவும்
உடனே தன் உடம்பில் இருக்கும் அத்தனை நோயும் பறந்து விட்டதாகவும் கூறினான்.
தன் மனைவி எப்படியும் அவரிடம் நம்பிக்கை
வைக்கவேண்டும் என்பதற்காக அப்படி சொன்னான்.இனிமேல் நாம் இயேசு கிறிஸ்துவைத்தான் வணங்கவேண்டும்
என்று முடிவு செய்திருப்பதாகவும் கூறினான்.
அவன் மனைவி ஒன்றும் சொல்லவில்லை.
பால் பிரசங்கியார் தங்கள் வீட்டில் சாப்பிட மாட்டாரே ..!.அவர் மேல்ஜாதிகாரர்
போல தெரிகிறதே என்று தன் கணவனிடம்கேட்டாள்.
இவர்களின் போராட்டம் ஆவியானவரால் பால்பிரசங்கியாருக்கு உணர்த்தப் பட்டது. அவர்
சங்கரவேலை அழைத்து அவனிடம் பழைய சாதத்தில் ஊற்றபட்ட நீர்த்த தண்ணீர் இருக்குமா..? என்று
கேடடார்.
சங்கரவேலுக்கு தாங்கமுடியாத சந்தோசம்.
மனைவியிடம் ஓடினான் .பிரசங்கியார் நீர்த்த தண்ணீர் கேட்கிறார் என்றான்.
அவர்களுக்கு புரிந்து விட்டது. பிரசங்கியார் தங்கள் வீட்டில் சாப்பிடுவார்….
என்று..
கொஞ்சம் மோரில் தண்ணீரை ஊற்றி கொஞ்சம் உப்பும்சேர்த்து பால்பிரசங்கியாரிடம்
கொண்டு வந்தான்.
பிரசங்கியார் அதற்குள் பக்கத்தில் இருந்து பொதி மூட்டையில் தலை சாய்த்து தூங்கிகொண்டிருந்தார்.
இதை பார்த்த சங்கரவேலுக்கு சொல்ல முடியாத ஆனந்தம்.
பொதி மூட்டையில் சாய்ந்து உறங்கும்
மனிதன் தம்மோடு நிச்சயம் தங்குவார் என்று நினைத்து கொண்டான்.
பக்கத்து குடிசைகளுக்கு ஓடிப்போய் குட்டையில் தனக்கு நடந்ததை மீண்டும் மீண்டும்
மிகைப்படுத்தி கூறி அந்த மக்களை திகைக்க வைத்தான்.
பால் பிரசங்கியார் உறக்கத்தில் இருந்து விழிக்கும்போது அவரின் கால்மாட்டில்
நிறைய நோய்வாய் பட்டவர்களும் பேய் பிடித்தவர்களுமாக கூடியிருந்தனர்.
பால்பிரசங்கியாருக்கு கொஞ்சநேரம் எதுவும் புரியவில்லலை.
பின்பு விளங்கி கொண்டார்.
அவர்களுக்கு இயேசுவின் அன்பை பற்றியும் அவரின் சுகமாக்கும் வல்லமையை பற்றியும்
கூறினார். சங்கரவேலுக்கு இதெல்லாவற்றையும் விட அங்கு அற்புதம் நடப்பதை பார்க்க வேண்டும்.
அதற்காக ஆவலாக எதிர்பார்த்து காத்துகொண்டிருந்தான்.
அங்கே கூட்டததில் சலசலப்பு .
திரும்பி பார்த்தார் பால் பிரசங்கியார் .
கால்களில் சங்கிலிபோட்டு கட்டபட்ட ஒரு வாலிபனை எட்டு பேர் சேர்ந்து தூக்கி கொண்டு வந்தனர்.
அவன் காட்டு கூச்சல் போட்டு கொண்டிருந்தான்.
பால் பிரசங்கியாருக்கு முன்னே இருபது அடி தூரத்தில் அவனை அமுக்கி பிடித்தபடி
இருந்தனர்.
பால் பிரசங்கியார் வேதத்தில் இருந்து இயேசு குணமாக்கின மனிதர்களை பற்றி அவர்களுக்கு
கூறிக்கொண்டிருக்கையில்… பேய்பிடித்த வாலிபன் தன்னை பிடித்திருந்தவர்களை ஓங்கி உதிறிவிட்டு
பால் பிரசங்கியாரை நோக்கி பாய்ந்து வந்தான்.
பாய்ந்து வந்தான் என்று சொல்வதைவிட பறந்து வந்தான் என்று சொல்லவேண்டும்.
சங்கரவேல் பதறி தூணோடு ஒட்டிக்கொண்டான்.
பறந்து வந்த மனிதன் பால் பிரசங்கியாரின்
காலடியில் வந்து விழுந்தான். மூச்சும் இல்ல பேச்சும் இல்லை
சற்று நேரத்தில் எழுந்து உட்கார்ந்து விட்டான்.
கூட்டம் திகைத்தது.
ஐந்து வருடம் பையித்தியமாய் இருந்தவன் ஐந்து நிமிடத்தில் சுகமானது எவ்வாறு..?
பால்பிரசங்கியாரிடம் மிகுந்த பயபக்தியாய் நடந்து கொண்டார்கள்.
ஆனால் தங்கள் குல தெய்வத்தை யாரும் விட்டு விடவில்லை.
சங்கரவேல் ஒன்றைப் புரிந்து கொண்டான்.
இயேசு என்ற பெயரை சொன்ன மாத்திரத்தில் எப்பர்பட்ட நோயும் குணமாகும்.ஆகவே தாமும்
இதை பரிசோதித்து பார்த்தால் என்ன என்று நினைத்தான்.
முதலில் தன்னிடம் சீர் தட்ட வரும் பிளிளைகளிடம் பரிசோதிக்க ஆரம்பித்தான்.
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்….. ஸ்தோத்திரம்…. ஸ்தோத்திரம்… ஸ்தோத்திரம்….(மிக மெதுவாக..கூறி..)கடைசியாக
இயேசுவின் நாமத்தில்….ப்..போ பிசாசே என்று ..சத்தமாக சொல்லுவான் ..
மிக அதிசயமாக எல்லா குழந்தைகளும் பூரண சுகம் அடைந்தார்கள். சங்கரவேல் தன்னை
மிக பக்திமானாக ஆக்கிகொண்டான்.அவன் வீட்டில எப்போதும் நோயாளிகள் கூட்டம்.
இப்பேர் பட்ட சங்கரவேலை பார்த்துவிட்டுதான் அன்று பால் பிரசிங்கியார் வந்து கொண்டிருந்தார்
..
அவரின் காலை சாப்பாடு வயிற்றிற்குள் எதோ செய்தது.
கொஞ்சம் ஒதுங்கினால் நல்லது என்று நினைத்தார் .தூரத்தில் ஒரு கிணறு தெரிந்தது
.அதனை நோக்கி நடந்தார்.
அந்த கிணற்றில் அவருக்கு ஏற்படப்போகும் ஆபத்தை அவர் அப்போது உணரவில்லை
அந்த பகுதியில் காணம் பயிரிடபட்டதற்கான
அறிகுறிகள் தெரிந்தது.
ஆங்காங்கே சில காணப்பயிர்கள் வளர்ந்து
காணப்பட்டது .
ஒருசிலவற்றில் காணமும் இருந்தது.
வயிற்று கழிவை போக்குவதற்காக ஒரு முள் மரத்தடிக்கு சென்றுவிட்டு பின் தன்னை
சுத்தம் செய்வதற்காக கிணற்று பக்கம் போனார்.
ஒரு விஷயத்தை உங்களுக்கு இதுவரை நான் சொல்ல வில்லை.
அவருக்கு வலது கை சரியாக வேலை செய்யாது.
அதாவது முழுவதுமாக மேல்நோக்கி தூக்க
முடியாது. கிணற்றிற்குள் எட்டிப்பார்த்தார் .
பதினைந்து அடிக்கு கிழே தண்ணீர் இருந்தது.
சுவரில் கால்மிதத்து இறங்க ஒரு கல் இருந்தது.
அதன் அடியில் மற்றொன்று. பின் அடிப்பாகம்வரை செல்ல ஓரமாக படிக்கட்டு இருந்தது..
இலகுவாக இறங்கிவிடலாம்.தன் வேஷ்டி ஜிப்பா எல்லாவற்றையும் அவிழ்த்து கரையில்
வைத்து விட்டு ,ஒரு துண்டை மட்டும் இடுப்பில் கட்டி கொண்டு மெதுவாக கிணற்றிற்குள் இறங்கினார்..
கை..கால் எல்லாம் தண்ணீரில் துடைத்து
கொண்டு மேலே ஏற ஆயத்தம் ஆனார்.
ஒரு கையால் மேலே உள்ள கல்லை பற்றிபிடித்து கொண்டு உடம்பை மேல்நோக்கி தூக்கினார்.ஆனால்
மொத்த பாரமும் அவரை கீழ்நோக்கி இழுத்தது.
சரியாக வேலை செய்யாத வலதுகை யால் எதையும் இறுக பற்ற முடியவில்லை…
பால் பிரசங்கியாருக்கு நன்றாக புரிந்தது,தன்னால் மேலே ஏறமுடியாது என்று.
கிணற்றில் ஓரமாக நின்று கொண்டு யோசித்தார் .
இது பலரும் வந்து போகும் இடம் அல்ல.யாராவது வரலாம்.வராமலும் இருக்கலாம்.எப்போது
யார் வருவார்கள்..? .அதுவரைக்கும் காத்திருக்க வேண்டுமா...
கிணற்றில் ஓரமாக அடிப்பாகம் நோக்கி
போகும் படிக்கட்டில் ஓரமாக இருந்து கண்களை முடிக்கொண்டார்.
மனது நம்பிக்கை இழக்காமலிருக்க வேண்டுதல் செய்தார்.
இந்த கிணற்றுக்குள் சமாதியாகவா கர்த்தர் அழைத்தார்.
மனது கர்த்தரை நோக்கி வேண்டுதல் செய்து அழுதது .
கிணற்றிற்குள் வெயில் சுள்ளென்று அடித்தது.
வாரா வினை வந்தாலும் சோராதே மனமே
வல்ல கிறிஸ்துனக்கு நல்ல தாரகமே
மரணம் உறுகின்ற தருணம்வந்தாலும்
மருள விழாதே நல் அருளை விடாதே
வையகமே உன்குய்ய ஓர் நிலையோ
வானவனை முற்றும் தானடைவாயே.
ஒரு ஓரமாய் கண்களை மூடிதியானத்தில் இருந்தவருக்கு யாரோ பிடித்து தள்ளுவது போல உணர்ந்தார்.திடுக்கிட்டு
கண்ணை திறந்து பார்த்தார்.ஆச்சரியம்;
அவர் கிணற்று கரையில் உட்கார்ந்து கொண்டிருக்கிறார்.வானத்தை அண்ணார்ந்து பார்த்து
கண்ணீர் விட்டார்.
பரலோகத்தின் அருளின் பொருளே
நரலோகரில் அன்பேனைய்யா
ஆழம்அறிவேனோ
அன்பின் ஆழம் அறிவேனோ.
அன்பே அன்பே
அன்பே ஆருயிர் உறவே
ஆனந்தம் ஆனந்தமே ..
பாடல் மளமளவென்று உரு ஏறியது.
இந்தபாடல் இன்று வரை அனேகரால் பாடப்படுகிறது
--------------------------------------------------------------------------------------------------------------------------------
பெந்தேகோஸ்தே சபைகள் ஆரம்ப காலத்தில் வளர்ந்த விதம் மிக கடுமையான பாதையில்தான்;
நகை போடக்கூடாது……
தாலி போடக்கூடாது…
மருந்து எடுக்ககூடாது…என்று அவர்களுக்கு உபதேசம் செய்யப்பட்டது.
ஏற்கனவே நகை போட்டவர்கள் நகைகளை கழட்டினார்கள்.
தாலி போட்டிருந்தவர்கள் தாலியை கழட்டினார்கள்..
ஆகவே சபையில் ஆள்சேருவது என்பது மிக கடினமாய் இருந்தது.
இதையும் மீறி விசுவாசிகள் சபையில் சேர்ந்தனர்.
போதகர்கள் கையினால் அற்புதங்கள் சாதாரணமாய் நடைபெற்றது.
ஆனால் விசுவாச வீடு எனப்படும் faith home ல்..பாதிநேரம்
பட்டினிதான்…
ஆனால் இந்த பேதைகள் கூடி ஆராதிக்கும் போது கர்த்தருடைய மகிமை இறங்கும்….
இதை நான் சிறுவயதிலே நன்றாக உணர்ந்திருக்கிறேன்.
வரிசையாய் ஆண்கள் பாயில் உட்காந்து பாடுவார்கள் ..
உச்ச ஸ்தாயில் பாடும்போது ஆண்களின் குரல் வானம் வரை எட்டி பிடிக்கும்.
இசைக்கருவி என்பது டிரம் மட்டுமே.
ஆனால்கையை தட்டி பாடும்போது ..அதற்கு நிகராக நான் இதுவரை எங்குமே பாடல் கேட்டதில்லை
ஒரு நகிழ்ச்சியை மட்டும் கூறிவிட்டு கதையை தொடர்கிறேன்.
பாளையங்கோட்டைக்கு ஒரு முறை சாது ஏசுதாசன் கன்வென்சனில் பேச வந்திருந்தார் (கிருபாசன
சபை ஸ்தாபகர்..)
.நாங்கள் இசைக்கருவிகளுடன் முதலில் அழகாக பாடினோம்.
இறுதியாக சாது மைக் முன்னே வந்து நின்றார்.
மெலிந்த தேகம் .தாடியுடன் கூடிய எளிமையான தோற்றம்.
தொண்டையை செருமிக்கொண்டு .கைகளை தட்டி பாட ஆரம்பித்தார்.
வானந்திறந்தருளும் பல
தானங்களை இந்நேரமதில்
வானவனே ஞான முள்ள வல்ல குரு நாதனே
தேனிலும் மதுரம் திவ்ய ஆசீர்வாதங்கள்.
அவர் கைதட்டின ஓசை இருக்கிறதே… அப்பப்பா….
இது வரைக்கும் அப்படி கைதட்டின ஒரு நபரை நான் பார்த்ததே இல்லை..
கூட்டம் அவரோடு பாட ஆரம்பித்தது.
அவ்வளவுதான்..
ஒரு நிமிடத்தில் கூட்டத்தினரின் மேல்
ஆவியானவர் வல்லமையாய இறங்கினார்.ஆண்களும்பெண்களும் ஆரவாரித்தார்கள். அங்கே இசைக்கருவிகள்
செயலிழந்தன..
இப்படி சாதாரனமான ஆட்கள்தான் அந்த காலத்தில் போதகர்களாக இருந்தனர்…(இதற்கு கிழே
நான் எழுதுவது ….பாளை மனோஸ் பாஸ்டர் பத்திரிக்கையில் எழுதியதும்…பால் பாஸ்டரிடம் நானே
கேட்டதுமாகும்…)
அப்படி ஒருவர்தான் அருளப்பன் என்னும் போதகர்.
இவர் மதுரையில் (கரிமேட்டில்..) ஊழியம் செய்து கொண்டிருந்தார்.
இலங்கை பெந்தேகோஸ்தே சபையின் சார்பாக வேலை செய்தார்.
இருக்க வீடு இலலை..
ஆகவே பகல்நேரம் தென்னந்தோப்பில் தங்குவதும்
இரவில் இரயில்வே பாலத்தின் கீழும் தங்கி ஊழியம் செய்தார்.
மிகுந்த பிரயாசத்துக்கு பின் ஒரு சின்ன வீட்டை வாடகைக்கு பிடித்து அதிலே தொடர்ந்து
வேலை செய்தார்.
ஆரப்பாளையம் ,கரிமேடு . மஹபுபாளையம் இப்பதியில் ஏழுபேரை இரட்சிப்புக்குள் வழி
நடத்தினார்….அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுக்கவேண்டும்.
பாஸ்டர் அருளப்பன் அவர் சபையின் மூத்த
போதகர்களால் பாஸ்டர் பட்டம் பெறவில்லை.
ஆகவே ஞானஸ்நானம் அவர் கொடுக்க கூடாது.
இலங்கையில் உள்ள தலைமைக்கு தெரியபடுத்தனார். அப்போது இலங்கையில் இருந்து பால்
பாஸ்டரையும் நல்லையா பாஸ்டரையும் தலைமை அனுப்பியது.
இருவரும் மதுரை கரிமேடு வந்துசேர்ந்தனர்.
அப்போதெல்லாம் ஞானஸ்நானம் என்பது ஊர் அறிய உலகறிய கொடுக்கபடும்.
ஆற்றில்வைத்து ஞானஸ்நானம் எடுப்பதையே மக்களும் விரும்பினார்கள்.
ஆகவே இவர்களும் ஆற்றில் ஞானஸ்நானம் கொடுப்பதற்காக சென்றார்கள்.
ஆரப்பாளையம் ரயில்வே பாலத்துக்கு கீழேதான் தண்ணீர் கொஞ்சம் அதிகமாக இருக்குமாம்.
இவர்கள் போன நாள் அன்று ஆற்றில் தேவையான அளவு தண்ணீர் இல்லை.
ஞானஸ்நானம் பெறப் போனவர்களும் பாஸ்டர்களும் சோகமடைந்தனர்.
அங்கேயே மணலில் முழங்காலிட்டு ஜெபித்தனர்..கொஞ்சம் விசுவாசம் பெலப்பட நாளை வருவோம்
கர்த்தர் நாளைக்குள் அற்புதம் செய்வார் என சொல்லி
விசுவாசிகளை அனுப்பி விட்டு .(..நல்லையா பாஸ்டர் நன்றாக வயலின் வாசிப்பாராம்.)
இருவரும் அதிக பாரத்துடன் ஜெபித்தார்களாம்…பாடல் வரிகள் மெல்ல மெல்ல வரத்தொடங்கியது.
யோர்தான் நதியோரம் திகையாதே மனமே
யோசனையால் உன்னை கலக்காததே உள்ளமே
வைப்பாயுன் காலடி தற்பரன் சொற்படி
வானவன் இயேசுதான் வாக்கு மறாரே
வானவன் இயேசுதான் வாக்கு மறாரே
பாடல் முழுவதுமாக வளர்ந்து முடிந்தது.
இருவரும் விசுவாச வீடு நோக்கி நடக்க ஆரம்பித்தனர்.
அற்றின் கரையில் ஏறி கால் வைக்கும்போது மெல்லிய மழை துளி ஒன்று பால் பிரசங்கியாரின்
தலையில் விழுந்தது.
நிமிர்ந்து வானத்தை பார்த்தார்.
வானம் மெதுவாக கருக்க ஆரம்பித்திருந்தது..
வேகமாக வீட்டைவந்தடைந்தனர்.
அன்று இரவு பெய்த பேய் மழையால் ஆற்றில் தண்ணீர் தாறுமாறய் ஓடியது.
அடுத்த நாள் அந்த ஏழு பேருக்கும் ஞானஸ்நானம் கெடுக்கபட்டது.
அந்த அதிசயத்தை பார்த்த ஒரு அம்மா மஹபுபாளையத்தில் ஆராதனை கட்டடம் கட்ட கொஞ்சம்
இடம் இலவசமாக கொடுத்திருக்கிறார்கள்.
அந்த இடத்தில் இப்போது TPM சென்டர் சபை உள்ளது.
மேலப்பாளையம் சந்தையில் முகப்பில் உள்ள உசிலமரத்தடியில் நான் ஸ்கூட்டரை நிறுத்தும் போது மணி மதியம் 12:30..
அங்கு கருவாடு வாங்குவதற்கு……(என் கடையில் வைத்து விற்பனை செய்ய..)….சென்றிருந்தேன்.
மஞ்சப் பாறை. சீலா.சாளை .வாளை எது கிடைத்தாலும் வாங்க வேண்டியது தான். முடிவுடனே
சென்றேன்.
அது மாட்டுச் சந்தை. ஏகபட்ட மாடுகளின் கூட்டம்.
கருவாட்டுக் கடைகள் இருப்பது இந்த மாடுகளை தாண்டிசென்றால் அந்தபக்கம் கருவாட்டுக்கடைகள்.
இடத்திற்கு தகுந்த மாதிரி என்னை மாற்றிக் கொண்டேன்.
கை மடிக்கபட்ட சட்டை .
இடுப்பில் லுங்கி.
தோளில் துண்டு .இப்படி நம்ம ஊரு வியாபாரி கெட்டப்பில் போயிருந்தேன்.
அதுதான் வசதியாக இருந்தது
..மாடுகளை நல்ல விலைக்கு விற்று விட்ட திருப்தியில் பலபேர்அங்கே இருந்த ஹோட்டலில்
சத்தம் போட்டு சிரித்து சாப்பிட்டுகொண்டிருந்தனர்..
வறுமையில் மாட்டை விற்றுவிட்டு தொங்கிய முகத்துடன் சிலர் என்னை கடந்து சென்றனர்.
சாட்டை கம்பு….. ,சூரி கத்தி…..,இடைவார்…..மாடுகளுக்கு கழுத்தில் கட்ட வேண்டிய
மணிகள்… இவைகளை வியாபாரிகள் கூவி கூவி விற்றுக்கொண்டிருந்தனர்….
என் பர்வை இவைகளை கடந்து சென்று கொண்டிருக்கையில்…… ஒரு இடத்தல் குத்திட்டு
நின்றது.
அது செருப்பு வியாபாரயின் கடை.
சாதாரண செருப்புகள் அல்ல….
அடிச்செருப்புகள்……….அதாவது செருப்பின் அடிப்பாகம் டயர் வைத்து தைக்கபட்டவை.
இன்னும் சொல்லப்போனால் ஆணியால் அடிக்க பட்டு ரொம்ப ஸ்ட்ராங்காக இருக்கும் .
வயல்களில் வேலை செய்வோர்கள்.காடுகளில் வேலை செய்பவர்கள் .கிராமத்து மனிதர்கள்……………இவர்களுக்கு
இந்த செருப்பு அவர்களின் கனவுச்செருப்பு.
எந்த முள் செடியிலும் ஏறி மிதிக்கலாம் என்பார்கள்.
இரண்டுவருடமானாலும் கல்லாய் உழைக்கும்.என
சந்தோசமாக சொல்வார்கள்..
இந்த செருப்பை நான் இதற்கு முன் போட்டது
இல்லை….ஆனால் பார்த்திருக்கிறேன்.
வீசைக்காரர் வெள்ளையா நாடார் இந்த செருப்பை போட்டுக்கொண்டு இடுப்பிலே நீள வெட்டருவாள்
தொங்க காலையிலே உடைவெட்டும் வேலைக்கு என் வீட்டுப்பக்கமாக போவார்.
எதிரே யாராவது உறவினன் வந்தால் மிக சத்தமாக….. என்ன மப்பிளே..எப்படி இருக்கீக….என்று
தெம்பாக கேட்பார்….இந்த அடிச்செருப்போடு அவர்காலை இழுத்து….. இழுத்து..(பாரம்..)…..நடந்து
போகும் .அழகே அழகு.
எனக்கு அந்த கடையை தாண்ட முடியவில்ல…..எதோ ஒரு சக்தி என்னை அங்கே நிறுத்தியது..
எனக்கு அந்த செருப்புகளின் மேல் ஆசை ஆசையாய் வந்தது.
அருகே போய் அந்த செருப்புகளைப் பார்த்தேன்.
ஒன்றை எடுத்து மெதுவாக உட்பக்கமாக தடவி கொடுத்தேன் .
என் கால்களில் போட்டுப் பார்த்தேன்….கொஞ்சம் இருகலாக இருந்தது.
வேறு செருப்பை எடுத்து ஆராய்ச்சி செய்து… முடிவாக விலையை கேட்டு…. கசடி…..கொஞ்சம்
குறைத்து …வாங்கினேன். கடைக்காரன் என் கைகளில் அந்த செருப்புகளை எடுத்து தந்தான்…
சந்தோசமாக அதை சுமந்தபடி இருபது அடிதூரம் வந்தேன்.என் கைகளில் இருக்கும் செருப்பை
பார்த்தேன்.
அடக்கடவுளே……. இந்த செருப்பு எனக்கு எதற்கும் பயன்படாதே….
என் வாழ்கையில் எந்த பகுதியலும் பயன்படாத ஒரு பொருளை நான் ஏன் இவ்வளவு ஆசைபட்டு
வாங்கினேன்…….
இப்போது அதை பார்ப்பதற்கே எரிச்சலாய் இருந்தது…
திருப்பி கொண்டு போய் அவனிடமே கொடுத்து விடலாமா..?.........யோசித்தேன்….ம்……அந்த
செருப்பு தைப்பவன் என்னை மகா கேவலமாக அல்லவா நினைப்பான்.
இந்த செருப்போடு வீடு போனால் என் மனைவியின் ஒரு பார்வைக்கே என்னால் பதில் சொல்ல
முடியாது…
கருவாடு வாங்க போன இடத்தில் இப்படி ஒரு வேலையா…?.....இந்த .கருமத்தை போகும்போது
தூர எறிந்து விடலாம் என முடிவு செய்தேன்..
சரி கருவாடு வாங்க போகலாம் என்று கருவாட்டு கடைக்கு போனேன்.அங்கே கருவாட்டு
வியாபாரி என் ஊர்க்காரன்.பெயர் செல்வராஜ்.பக்கத்தில் போனதும் அவன் கழுகுப் பார்வையில்
பட இந்த செருப்பு தப்பவே இல்லை.
அண்ணே இதென்ன அடிச்செருப்பு…! இது யாருக்கு..?கேள்வி மேல கேள்வி கேட்டான்…அட
போப்பா…எனக்குத்தான் என்றேன்.
விழுந்து விழுந்து சிரித்தான்.பேண்ட் போட்டு சட்டைய இன்பண்ணி இந்த செருப்பையும்
போட்டா ரொம்ப சூப்பரா இருக்கும்..ணே….
ஆமா…..இவனும்…இவன் ஜோக்கும்…..எனக்கு எரிச்சலாகவும் வெறுப்பாகவும் இருந்தது.
ஒரு வழியாய் கருவாட்டை வாங்கி கொண்டு என் கடைக்கு வந்து சேர்ந்தேன்.
அங்கே வியாபார மும்முரத்தில் என்மனைவி என்னை கவனிக்கவில்லை.
அப்பாடா….நிம்மதி.
செருப்பை ஒரு மூலையில் வீசிவிட்டு நல்ல பிள்ளையாக இருந்து கொண்டேன்..
சரியாக அன்று மதியம் இரண்டுமணி இருக்கும்..
என் கடைக்கு முன்னே நேர் கிழக்கில் ஒரு உருவம் என் கடையை நோக்கி
வருகிறது.அவர் நமது கதாநாயகன் பால்பிரசங்கியார்.
அப்போது அவருக்கு வயது எழுபதுக்கு மேல் இருக்கும்…
நல்ல வளர்த்தியான மெலிந்த தேகம்.
செயலிழந்த ஒரு கை ஆடாமல் அவரோடு வரும்..தோளில் ஒரு ஜோல்னா பை.
கையில் ஒரு குடை.நடக்க முடியாமல் நடந்து வருகின்றார்.
அப்போது என்கடைக்கு முன்னே மிகப்பெரிய மைதானம்தான் இருந்தது..கடையில் இருந்து
பார்த்தால் மெயின் ரோடு தெரியும்.
நான் தூரத்தில் இருந்தே அவர் வருவதை கவனித்து விட்டேன்.
ஒருவாறாக வந்து சேர்ந்து விட்டார்.
வந்தவர் ஒரு சேரில் அமர்ந்து…..அப்பாடா…என்றார்…
..நான் கேட்டேன்
.என்ன பாஸ்டர்…..என்ன ஆச்சு..தண்ணீர் குடிக்கீங்களா..?
அவர் ..ம்..என்றார்.
தண்ணீர் குடித்து விட்டு…என்னா வெயிலு….செருப்பு வேற அறுந்து போச்சு…அந்த தார்
ரோட்டுல வெறுங்காலோட நடக்கமுடியல..என்றார்
.செருப்பில்லா அவர் கால்களை பார்த்தேன்…நடந்து நடந்து பாதத்தின் அடிப்பக்கம்
தேய்ந்திருந்தது..
எனக்கு கொஞ்சம் புரிந்த மாதிரி இருந்தது.
நான் மறைத்து வைத்திருந்த செருப்புகளை எடுத்து அவரிடம் நீட்டினேன்…இது உங்களுக்கு
பிடிக்குமா..? என்று ..மெதுவாக கேட்டேன்.
அவர்கைகளில் வாங்கி அந்த செருப்புகளை மேலும் கீழும் பார்த்தார்..பின் கால்களில்
போட்டுப் பார்த்தார் .அது அவருக்கென செய்யபட்டது போல கன கச்சிதமாக பொருந்தியது.
சாலமன் இந்தமதிரி ஒருசெருப்பு வாங்கணுமுண்ணு ரொம்ப ஆசைபட்டேன்….கர்த்தர் இண்ணக்கிதான்
தந்திருக்கார்….என்றார்.
நான் என்ன சொல்ல …!
.தூரமாய் போய் நின்று மனதிற்குள் அழுதேன்…
..நான் காத்திருந்து கர்த்தரின் சத்தத்தை கேட்பவன் அல்ல.
மணிக்ணக்காய் முழங்காலில் நிற்பவனும் அல்ல..
ஆனாலும் தனது ஊழியக்காரனின் செருப்புகள் அறுந்தவுடன் அவருக்கு தேவையான செருப்பை
வாங்க சாதாரணமாண என்னை இயக்கிய தேவனை புகழ்வதா…?
..அல்லது
தேய்ந்த கால்களுடன் நடந்து திரிந்த இந்த தேவமனிதனை புகழ்வதா..?….நீங்கள்தான்
சொல்லவேண்டும்….
அன்று திருநெல்வேலி வீரராகவபுரத்தில் இருந்து மேலப்பாளையம் வரவேண்டும் என்றால்….
கொக்கிரகுளம் தாண்டி நீளமான வயல் வெளிகளை ஊடுருவித்தான் வரவேண்டும்.
இரவு நேரத்தில் கும்மிருட்டாக இருக்கும்.
கள்ளர் பயம் அதிகம்.
கொக்கிரகுளத்திற்கும் மேலப்பாளையத்திற்கும் இடையில் குறிச்சி ரயில்வே நிலையம்..
கொக்கிரகுளத்திற்கும் குறிச்சி ரயில்நிலையத்திற்கும் இடையில் ஒரு இசக்கி கோயில்.
மதியம் 12மணியிலும் இரவு 8மணிக்கு மேலும் இந்த கோயிலை தாண்டிபோக பயப்படுவார்கள்.
திருநெல்வேலியில் சொக்கலால் பீடிக்கம்பெனியில் வேலை பார்ப்பவர் தங்கசாமி.
இரவு 9மணி வாக்கில் வேலை முடித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
அவர் வீட்டுக்கு வர வேண்டுமானால் இந்த இசக்கி கோயிலை தாண்டித்தான் வரவேண்டும்.
அவர் மாமனார் அவருக்கு புது ராலே சைக்கிள் வாங்கி கொடுத்திருந்தார்.
மாமனாரின் அதிக பாசத்தால் மாமனாருடனே செட்டில் ஆகிவிட்டார்.
திருமணமாகி மூன்று வருடம் கழித்து அவர் மனைவி செல்லம்மாள் ஒரு ஆண் குழந்தையை
பெற்றார்கள்.
மனைவி கத்தோலிக்க மதத்தில் இருந்து
பாஸ்டர் டேனியல் முலமாக இயேசுகிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு பெந்தேகோஸ்தே இயக்கத்துக்கு
மாறிவிட்டார்கள் .
செல்லம்மாளின் தகப்பனார் மைக்கேல்நாடார் கத்தோலிக்கராகவே இருந்தார்.
தங்கசாமி இசக்கி கோயில் அருகே வரும்போது கொஞ்சம் பயந்தார்.
ஆனால் தன் சைக்கிளை வேகமாக மிதித்தார்.
ஆனாலும் சரியாக கோயிலை தாண்டும்போது விருட்டென்று ஏதோ குறுக்கே பாய்ந்தது.அது
சைக்கிளின் முன்சக்கரத்தில் மோதவே
சைககிளோடு கீழே விழுந்து விட்டார்.
கிழே விழுந்தவருக்கு முழங்கையில் சரியான அடி.
இப்போது அவருக்கு பயம் இல்லை. இசக்கி மீது சரியான கோபம் .
சைக்கிளை எடுத்துகொண்டு வீட்டுக்கு வந்தார். வீட்டிற்குள் காலை எடுத்து வைக்கவும்
தொட்டிலில் கிடத்தியிருந்த இரண்டு மாத குழந்தை தொட்டிலை விட்டு வெளியே துள்ளி விழுந்து
வீறீட்டு அழவும் சரியாய் இருந்தது .
தாய் பயந்து பதறி போய் பிள்ளையை எடுத்து அணைத்து கொண்டாள்.
பிள்ளையின் அழுகை பயங்கரமாய் இருந்தது.
தங்கசாமிக்கு விழங்கியது.தன்னை பயமுறுத்திய பேய் தன் பிள்ளையிடம் அதன் சேட்டையை
காட்டுகிறது இதற்கு முடிவு கட்டவேண்டும் என்று நினைத்து சுவற்றில் சாத்தி இருந்த கை
கடப்பாறையை தூக்கி கொண்டு மீண்டும் அதே இசக்கி கோயிலுக்கு சென்றார்.
யாருமே இல்லாத இரவுநேரம். இசக்கி கோயிலுக்கு ஒரு அடைப்பும் கிடையாது.
பல்லை பயங்கரமாக காட்டிகொண்டு இருக்கும் மண் சிலைகள் மட்டுமே அங்கே இருந்தது.
நின்று கொண்டிருந்த மண் சிலைகளின் மண்டையில் கடப்பாறையால் ஒரு போடு போட்டார்.சிலைகள்
சிதறி சுக்கு நூறானது. மீண்டும் வீட்டுக்கு வந்து விட்டார்.
காலையில் தங்கசாமியால் எழும்ப முடியவில்லை.இசக்கியின் கோபம் தங்கசாமிக்கு காய்ச்சலாக
வந்தது.
அடுத்த நாளே காய்ச்சல் வைசூரியாக மாறி
உடலெங்கும் பொக்களம்மாக வெடித்தது.
தங்கசாமிக்கு வைசூரியின் வேகம் தாங்கமுடியாத வேதனையை கொடுத்தது.
கொஞ்ச நாளில் வைசூரி இறங்கியது…ஆனால் திடீரென்று அவருக்கு பையித்தியம் பிடித்துவிட்டது.கண்ணில்
கண்ட எல்லோரையும் தாக்க ஆரம்பித்தார்.
அவர் மனைவி செல்லம்மாள் தனது போதகர் பாஸ்டர்..SP..டேனியேலுக்கு தகவல் சொல்லி
ஆனுப்பினார்.
பாஸ்டர் டேனியேல் உடனை வந்தார்.பாஸ்டரை கண்டவுடன் தங்கசாமி பெட்டி பாம்பாய் அடங்கினார்.
ஆக தங்கசாமியை FAITH HOME க்கு அனுப்பி
வைப்பது என முடிவு செய்யபட்டது.எப்படி கொண்டு செல்வது..?;. பைத்தியமான தங்கசாமியின்
கைகள் கால்கள் கட்டபட்டன.
ஒரு வண்டியில் வைத்து ஊரில் உள்ள இரண்டு பேரின் உதவியுடன் பாளையங்கோட்டையில்
உள்ள FAITH HOME க்கு கொண்டு செல்லபட்டது.
தங்கசாமியின் மாமனார் மைக்கேல் நாடார் கத்தோலிக்கர் ஆகையால் அவருக்கு பெந்தேகோஸ்தே
சபையின் ஆராதனை சுத்தமாக பிடிப்பதில்லை.
ஆனாலும் தான் அதிகமாக நேசிக்கும மருமகன் பைத்தியமாய் ஆனது அவருக்கு மிக மனத்
துயரத்தை கொடுத்தது.
வண்டி தங்கசாமியை சுமந்து கொண்டு பாளையங்கோட்டையில் உள்ள FAITH HOME க்கு சென்றது.
அப்போது அங்கு உதவி ஊழியக்காராக இருந்தவர் பாஸ்டர் பால்…
.தங்கசாமியை மெதுவாக வண்டியில் இருந்து இறக்கி கட்டுகளை அவிழ்த்து விட்டார்
பாஸ்டர் பால்.
தங்கசாமி அங்கே யாரையும் தாக்கவில்லை.சுமார்
ஒருமாதத்தில் தங்கசாமிக்கு பூரண குணம் ஆகியது.
தங்கசாமிக்கு அங்கே விஷேசமாக யாரும் ஜெபம் பண்ண வில்லை.அந்த இடத்தில் தெய்விக
வல்லமை அவரை குணமாக்கியது.
பாஸ்டர் டேனியலை பற்றி இரண்டு வார்த்தைகள்.
அவரிடம் பேய் பிடித்தவர்களை அனேகர்
அழைத்து வருவார்கள்.
அவர் அவர்களை ஆலயத்தில் விட்டுவட சொல்லுவார்.
அந்த பேயிடம் எதுவும் பேசமாட்டார்..
அப்படியே ஒரு வேளை அவருக்கு கோபம் வந்து விட்டால்
… ப்போ பிசாசே என்பார் ..
அவ்வளவே..அந்த மனிதனைவிட்டு பேய் தானாக போய்விடும்.
பேய் போனபின் பாஸ்டர் அவனுக்கு சுவிஷேசம் சொல்லுவார்.
இறுதியாக அவனுக்கு ஞானஸ்நானம் கொடுத்து விசுவாசியாக அனுப்பிவைப்பார்.
இதைபற்றி அவரிடம் நான் ஒரு முறை கேட்டேன்…
இயேசுவின் நாமம் சொல்லி விரட்டும் அளவுக்கு
இந்த எச்சி பேய்கள் மிகவும் பெரிதான விஷயம் இல்லை என்றார்.
ஆனால் பேய் போன பின் இந்த மனிதனுக்கு தெய்வ பாதுகாப்பு அவசியம்..ஆகவே அந்த மனிதனை
இரட்சிப்புக்குள் வழிநடத்தி ஞானஸ்நானம் பெற நாம் அவனுக்கு அறிவுரை சொல்ல வேணடும் என்பார்.
இவரைபற்றி காலம்சென்ற சகோதரன் தினகரன் ஒரு சம்பவத்தை சொன்னார்.
(..நான் கேட்டது..)
ஒரு முறை தூத்துகுடியில் இயேசு அழைக்கிறார்
கூட்டங்கள் நடக்கும்போது ஒரு பேய்பிடித்த மனிதனை கூட்டத்திற்கு அழைத்து வந்திருக்கின்றனர்.கூட்டம்
முடிந்தவுடன் அவனுக்காக உதவி ஊழியர்கள் அவனை சற்றி நின்று பாட்டுப்பாடி கண்ணை மூடி
ஜெபம் செய்திருக்கிறார்கள்.
பேய் பிடித்தவன் மட்டும் தன் கண்களை மூடவில்லை.
அவன் சுற்றி நின்றவர்களின் ஒவ்வொருவரின்
மூக்கிலும் சரியாக குறிபார்த்து வரிசையாக குத்து விட்டிருக்கிறான்.
குத்து வாங்கிய ஊழியர்கள் அலறியடித்து ஓடியிருக்கிறார்கள்.
இந்த சமயம் பார்த்து பாஸ்டர் டேனியேல் அந்தபக்கம் போயிருக்கிறார்.அவர் இதை பார்த்து
பேய்பிடித்தவன் அருகே போய் ..அவன் உச்சி முடியை பிடித்து திருப்பி அவன் முகத்தை பார்த்து
..ச்;சீ..போ பிசாசே…அவ்வளவுதான்
.அவன் கிழே பொத்தென்று விழுந்துவிட்டான்.
இதை தினகரன் சொல்ல நான் கேட்டிருக்கிறேன்.
பாஸ்டர் டேனியேலிடம் தினகரன் அதிக மதிப்பு வைத்திருந்தார் .
காரணம்.
தினகரனை இரட்சிப்புக்குள் வழிநடத்தியது
பாஸ்டர் டேனியேல் அவர்கள்.
சரி நமது கதைக்கு வருவோம்;
தங்கசாமிக்கு குணம் அடைந்தவுடன்,,, பால்பாஸ்டர் அவருக்கு இயேசுவை பற்றி சொல்ல
அவரும் ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ள தன்னை தயார் செய்தார்.
அன்று இரவு மைக்கேல்நாடார் ஜெபமாலை ஜெபம் சொல்லி விட்டு படுக்கைக்கு சென்றார்.
அவருக்கு ஒரு கனவு….
சமாதானபுரம் கல்லறைத் தோட்டத்தில் தான் நிற்பது போலவும் ..
அப்போது வானத்தில் …பிதா குமாரன் பரிசுத்தாவியானவர் மூவரும் வானத்தில் தோன்றியிருக்கிறார்கள் .
இவர் கிழே பார்த்திருக்கிறார்.
ஏரானமான பேர் கல்லறை குழிக்குள் ஜெபமாலையை உருட்டிக்கொண்டு குனிந்து கொண்டு
இருந்திருக்கின்றனர்
..இவர்….அடப் ..பாவிகளா….மேலப் பாருங்க…..மேலப்…பாருங்க..கத்தியிருக்கிறார்..
ஆனால் ஒருவரும் மேலே பார்க்கவே இல்லை..
கண்விழித்து பார்த்தார் அதிகாலை ஆகிவிட்டது.
அவருக்கு ஒரு உண்மை தெளிவாகியது .ஜெபமாலை உருட்டுவதின் மூலமாக தெய்வத்தை அடைய
முடியாது ..
ஆகவே உண்மை வழியை அடைய அதை பற்றி தெரிய வேண்டும்.
அந்த காலை வேளையிலே பாளையங்கோட்டைக்கு சென்று பாஸ்டர் டேனியேலை பார்த்து அவரிடம்
கனவை சொன்னார்..
டேனியேல் பாஸ்டர் அவருக்கு இயேசுவை பற்றி சொல்லி மைக்கேல் நாடாரையும் பால் பாஸ்டரிடம்
ஒப்படைத்தார்.
பால்பாஸ்டர் மைக்கேல்நாடாரையும் தங்கசாமியையும் ஞானஸ்நானத்துக்கு ஆயத்தப் படுத்தினார்.
இருவரும் ஒரே நாளில் பாளையங்கோட்டை வாய்க்காலில் ஞானஸ்நானம் எடுத்தனர்.
மாமனும் மருமகனும் மகளும் குடும்பமாக விவாசியானார்கள்.
பால்பாஸ்டர் என்னிடம்… தங்கசாமி…..தங்கசாமி..என்று மிகவும் மரியாதையாக குறிப்பிடுவார்.
.என்னிடம் ஏன் தங்கசாமியை பற்றி பால்பாஸ்டர் பேசவேண்டும் என கேட்கிறீர்களா.?
இசக்கி ..தொட்டிலில் இருந்து தூக்கி வெளியே போட்ட அந்த குழந்தை நான்தானே..!,
காலம் என்னையும் என் குடும்பத்தையும் புரட்டி எடுத்தது.
நான் ஒன்பதாவது படிக்கும போது என் தகப்பனார் காலமானார்.
வறுமையின் அடிமட்டம்வரை சென்றோம்.
தமிழ்நாட்டில் அப்போது அரிசி பஞ்சம் வந்தது.
பொது மக்கள் மக்காச்சோள மாவை வாங்கி சாப்பிட்டார்கள்..
ஏற்கனவே தடுமாறிக்கொண்டிருந்த எங்களின் வாழ்க்கை அகல பாதாளத்தை நோக்கி சென்றது.
குருணை அரிசி வாங்கி அதற்கு கூட்டாக புளியங்காயும் வத்தலுமாக சாப்பிட்டோம்.
அப்போது ஒருஅதிசயம் நடந்தது.
எங்களுக்கு சொந்தமான சிறிய இடம் ஒன்று.
அது சுமார் பத்து சென்ட் இடம் இருக்கும் .
அதிலே சுமார் ஒருவருடம் தண்டங்கீரை தானாக முளைத்து பெரிய செடிகளாக வளர்ந்து
கிடந்தது.அந்த கீரைகளை பறித்து சாப்பிட்டு உயிரோடு இருந்தோம்.அதன்பின் அந்த இடத்தில்
இந்நாள் வரை கீரை முளைக்கவேயில்லை ..
உக்கிரன்கோட்டையில் இருந்த ஜெர்மன் ஹாஸ்டலில் என் தம்பிமார் இரண்டுபேர் அங்கே
படித்தனர்.(இதில் ஒருவர் தான் பாஸ்டர் மனோஸ்..)
புழுத்துபோன அரிசியில் (புழுவுடன்..)கஞ்சியும் கசந்த துவையலும் தினமும் அவர்களுக்கு
உணவாக கிடைத்தது.
கிறிஸ்தவ ஆர்பனேச்(orphanage) வைத்து நடத்தும் பரிசுத்தவான்களே………
நீங்கள் ஆதரவற்ற குழந்தைகளுக்கு செய்யும்
அநீதிக்கு தக்கதாய் உங்களையும் உங்கள் பிள்ளைகளையும் கர்த்தர் தண்டிக்கவில்லையெனில்
கடவுள் என்று ஒருவர் இல்லவே இல்லை என்பதாகி விடும்……
.சரிபோகட்டும்(……..நினைத்தாலே வயிறு கொதிக்கிறது ,,,,)
நான் SSLC முடித்து விட்டு வடஇந்தியாவுக்கு
வேலை தேடிச்சென்றேன்.மூன்று வருடம் அங்கே இருந்து விட்டு ஊருக்கு திரும்பினேன். என்
சகோதரன் மனோஸ் பைபிள் ஸ்கூல் முடித்து அசெம்பிளி
ஆப் காட் சபையில் சேர்ந்து கேரளாவில் ஊழியத்தை ஆரம்பத்தார்.
மீண்டும் பலவருடம் கழித்து பாஸ்டர் மனோஸ் பெருமாள்புரத்தில் ஊழியத்தை ஆரம்பித்தார்.
திடிரென்று பால் பாஸ்டர் ஒரு நாள் அவரிடம் வந்தார்.
மனோஸ்…… கர்த்தர் என்னை உன்னிடம் அனுப்பியிருக்கிறார்…..நீ கர்த்தரால் ஆசீர்வதிக்கபடுவதை
நான் பாக்கவேண்டும் என்றார்…..மனோஸ் பாஸ்டர் அவரை சந்தோசமாக ஏற்றுக்கொண்டார்.
நானும் பால் பாஸ்டரை என்வீட்டிற்கு அழைத்தேன்.
அவரும் அன்புடன் இசைந்தார்..
.மாதம் ஒருமுறை வருவார்.
அது திங்கட்கிழமை அல்லது செவ்வாய் கிழமையாய் இருக்கும்.
மதியம் இரண்டு மணிக்குள் வருவார்.
இரவு என்வீட்டில் தங்குவார்.அதிகாலையிலே எழும்பி சென்றுவிடுவார்.
அவர் தூங்க ஆயத்தமாகும்போது என் மகனை அழைப்பார்.அவன் அவர் பக்கத்தில்போய் நிற்பான்.
அவனுக்கு அப்போது ஐந்து வயதுக்குள் இருக்கும்.
அவர் அவனை பார்த்து..
இயேசுகிறிஸ்த்து இரண்டாயிரம் வருடத்திற்கு முன் பூமிக்கு நமக்காக வந்து.. சிலுவையில்
மரித்தர்……அவ்வளவுதான்..
அதற்குள் அவர் அயர்ந்து தூங்கிவிடுவார்..
அவர் தூங்கும்போது வாய் வழியாக சுவாசிப்பார்.ஆகவே மேல் பல்வரிசையில் ஆடிக்கொண்டிருக்கும்
அவர் பல் ஒன்று மேலும் கீழம் ஆடும்.
இவன் அந்த பல் ஆடுவதை கொஞ்சநேரம் வியந்து பார்த்து விட்டு ..வந்துவிடுவான்.(இது
அவனே என்னிடம் சொன்னது..)
ரொம்ப நாளாய் பால் பாஸ்டர் வரவில்லை.
நான் பாஸ்டர் மனோசிடம் பால் பாஸ்டரை பற்றி விசாரித்தேன்.(மனோஸ் பாஸ்டர் என்னிடம்
சொன்னது..)
கடைசியாக ….பால்பாஸ்டர் போகும்போது
…மனோஸ்..எனக்கு அழைப்பு வந்துவிட்டது..இனி வரமாட்டேன் …..என்று கூறிவிட்டு சென்றுவிட்டார்..என்றார்..
.அதன்பின் பால்பாஸ்டர் வரவேயில்லை …..தான் சொன்னதுபோல் அவர் மறுமைக்குள் சென்றுவிட்டார்.
அவரின் குடும்பத்தாருக்கும் எங்களுக்கும் தொடர்பில்லாத காரணத்தால் அவர் அடக்கம்
எங்களுக்கு சொல்லப்பட வில்லை…
…நாங்களும் மெல்ல மெல்ல அவரை மறந்து விட்டோம். சுமார் இருபது வருடம் கடந்துவிட்டது.2013ம்வருடம்
மனோஸ் பாஸ்டர் சபையில் கன்வென்ஷன் நடக்கும்போது
பால்பாஸ்டரை பற்றி பேச்சு வந்தது.
பால் பாஸ்டர் படம்.மற்றும் …….
பாஸ்டர் டேனியேல் படம் …இவைகளை பேனரில் போட்டு மேடையில் வைக்க வேண்டும் என்றேன்.
ஆனால் பால்பாஸ்டர் போட்டோ இல்லை என்று கூறப்பட்டது.
ஏன் …?அவர்கள் குடுமபத்தாரிடம் இருக்குமே என்றேன்.
பால் பாஸ்டர் குடும்பத்தார் இப்போது அவர் வாழ்ந்த ஊரான பண்டாரவிளையில் இல்லை.
மதுரைக்கு சென்றுவிட்டனர்.மதுரையில் எங்கேயிருக்கிறார்கள் என்று தெரியாது என்று
மனோஸ் பாஸ்டர் கூறினார்.
எப்போது மதுரைக்கு சென்றார்கள் என்று கேட்டேன்.
அவர்கள் போய் பதினைந்து வருடம் இருக்கும்
என்றார்…
எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.
ஒரு மாபெரும் கர்த்தரின் மனிதன் வாழ்ந்த சுவடே இல்லாமல் போய்விட்டாரே…
இருபது வருடம் கழித்து எப்படி கண்டுபிடிப்பது…
யோசித்து கொண்டிருந்தேன்…
போன(2014) மே மாதம் ஆராதனையில் ….பாடல்பாடி முடிந்தவுடன் சங்கீத விளக்கம் கொடுக்கபட்டது…..அப்போது……..
நாளை பால் பாஸ்டரை தேடிப்போ ……..என்ற கட்டளை எனக்கு கொடுக்கபட்டது……
நான் என் பக்கத்திலிருந்த என் மகனிடம் நாளை நீ ப்ரியா என்றேன்
.அவன் ஆமா..ஏன் ..?என்றான்.
பால்பாஸ்டரை தேடிப்போக வேண்டும். என்றேன்
அடுத்தநாள் காலையில் நானும் என் மகனும் பால் பாஸ்டரின் குடும்பத்தாரை பற்றி
விசாரித்து வர கிளம்பினோம்..
அவர்கள் மதுரையில் எங்கே இருக்கிறர்கள்
என்று கண்டு பிடிக்க வேண்டும்.அவர் புகைபடத்தை அவர்களிடம் இருந்து பெறவேண்டும்.
காலையில் நானும் என் மகனும் புறப்படும்போது… என் மகன் என்னிடம்கேட்டான்…
பண்டாரவிளையில்..யாரிடம் போய் விசாரிக்க வேண்டும் ..?என்றான்
..நான் தெரியாது என்றேன்.
உங்களுக்கு அந்த ஊரில் யாராவது தெரியுமா..? என்றான்.
தெரியாது… என்றேன்.
அவர் இறந்து இருபது வருடம் ஆயிற்றே என்றான்.
.ஆமாம் ஆயிற்று.என்றேன்.
எப்படி விசாரிக்க…? என்றான்….
நான் ..மகனே ….முதலில் நாம் போவோம்….
அந்த ஊர் எல்கையில் போய் பைக்கை நிறுத்து என்றேன்.
நாங்கள் இருவரும் பண்டார விளை நோக்கி சென்றோம்.
ஒரு மணிநேர பயணத்திற்கு பின் பண்டார விளை என்ற எழுத பட்ட பலகை பக்கத்தில் பைக்கை
நிறுத்தினான் .
நான் இறங்கி வானத்தைப் பார்த்தேன்..
என் மகன் சற்று முன்னால் போய்
கண்ணில் கண்ட எல்லோரிடமும் பால்பாஸ்டரை பற்றி விசாரித்து கொண்டிருந்தான்.
நான் என் மகனிடம்
…..இந்த ஊரில் அப்போஸ்தலர் சபை ஒன்று உண்டாம்.. .அங்கே தான் அவர் ஆராதனையில்
கலந்து கொள்வார் என கேள்வி பட்டேன்.
ஆகவே முதலில் அப்போஸ்தலர் சபைக்கு போவோம்.என்றேன்.
ஒரு கடைக்காரரிடம் அப்போஸ்தலர் சபையை பற்றி விசாரித்தோம்.
அவருக்கு தெரியவில்லை.
நான் அவரிடம் இங்கே எதாவது பெந்தேகோஸ்தே சபைஇருக்கிறதா..? என்று கேட்டேன்.
அவர் …ஆமா….இந்த பாதையில் போனால் அங்கே இருக்கிறது .என்று வழியை காட்டினார்.
அவர் காட்டிய இடத்தில் ஒரு சபை இருந்தது.
ஆனால் அது அப்போஸ்தலர் சபை இல்லை……
மீண்டும் வேறு எதாவது பெந்தேகோஸ்தே சபை இருக்கிறதா…? என விசாரித்தோம்..
பின் அடுத்த இடத்திற்கு கை காட்டபட்டது.
அங்கே போய் பார்த்தோம்…
அது அப்போஸ்தலர் சபைதான்.
ஒரு பெரிய காம்பவுண்ட் சுவருக்குள் அமைந்திருந்தது.
காம்பவுண்ட் சுவரில் உள்ள இரும்புக்கதவில்
பூட்டு வெளிப்பக்கமாக தொங்கி கொண்டிருந்தது.
யாருமே அங்கே இருப்பதற்கான அடையாளம் காணப்படவில்லை.
அந்த இரும்புக் கதவின் கம்பிகளை கவலையுடன் பிடித்து கொண்டிருந்தேன்.
ஒருவர் என் பக்கமாக சைக்கிளில் கடந்து சென்றார்.
அவரிடம் இந்த சபையில் உள்ளே ஆட்கள் இருக்கிறார்களா..?என்று கேட்டேன்.அவர் சொன்னார்…
ஞாயிற்று கிழமை தூத்துக்குடியில் இருந்து ஒருவர் வருவார்.ஆராதனை நடத்தி விட்டு
போய்விடுவார்.
மீண்டும் அடுத்த ஞாயிறுதான் வருவார்.என்றார்…
நான் அவரிடம்…… இந்த சபைக்கு வரும் யாருடைய வீட்டையாவது எனக்கு காட்ட முடியுமா
..?என்று கேட்டேன்…
அதை பற்றி தெரியாது என்று சொல்லி விட்டு போய்விட்டார்.
சரி பரவாயில்லை … நாமே விசாரிப்போம் என்று மீண்டும் ஊருக்குள் சென்றேன்.
இருபது வருடத்திற்கு முன்னே வாழ்ந்தவரை விசாரிக்க வேண்டும் என்றால் நமக்கு தகவல்
சொல்பவருக்கு குறைந்தது நாற்பது வயதாவது இருக்கவேண்டும்.
அப்படி ஆட்களை பார்த்து பார்த்து விசாரித்தேன்
….ஒரு மணி நேரமாகியும் எந்த முன்னேற்றமும் இல்லை.
மீண்டும் அப்போஸ்தலர் சபையின் வாசலுக்கே வந்தோம்.
அந்த சபையின் காம்பவுண்ட் சுவர் கேட்டுக்கு எதிரே ரோட்டுக்கு அந்த பக்கம் ஒரு
தண்ணீர் குழாய்.
அது ஒரு சிமென்ட் திண்டில் அமைக்கபட்டிருந்தது.
வெயில் ஏறிவிட்டது.
நான் அந்த திண்டில் போய் உடகார்ந்தேன்.
என் மகன் அந்த இரும்பு கதவை பிடித்துகொண்டு உள்பக்கமாக பார்த்து கொண்டிருந்தான்…..
நான்…. சரி……போக வேண்டியதுதான்..இனி….என்னால் என்ன செய்யமுடியும்..? என கவலையுடன்
நினைத்து கொண்டிருக்கும்போது ..
.ஒரு வாலிபன் அந்த பக்கமாக சைக்கிளில் வந்து கொண்டிருந்தான். என் மகன் அவனிடம்…
உங்களுக்கு இந்த ஊரா …?என்று பேச்சு
கொடுத்தான்.
அவன்…. ஆமா…. என்றான்.
நாங்கள் வந்த நோக்கம் அவனுக்கு தெரிவிக்கபட்டது.
அவன் முழுமையாக கேட்டுகொண்டான்.
நீங்கள் சொல்லும்..
எல்லாவற்றிற்கும் பதில் சொல்ல வயதான ஆட்களால் தான் முடியும்..அப்படி பட்ட வயதான
ஒருவர் இங்கே இருக்கிறார் .
அவர் பெயர்..BILLY..PRAY..அவரைகாட்டுகிறேன்..என்றான்.
என் மகனை அந்த வாலிபனோடு பைக்கில் அனுப்பி விட்டு நான் அதே சிமென்ட் திண்டில்
உட்கார்ந்து கொண்டேன்.
மனதில் சிறிது நம்பிக்கை வந்தது…
போனவர்கள் திரும்பி வந்தார்கள். .BILLY PRAY ஊரில் இல்லை .
அவர் வீட்டில் இருப்பவர்களுக்கு பால் பாஸ்டரை பற்றி எதுவும் தெரியவில்லை.
ஆனால் BILLY PRAYயின் போன் நம்பரை கொடுத்தவிட்டார்கள்.
நான் செல்போனில் அந்த நம்பருக்கு தொடர்பு கொண்டேன்.
இணைப்பு கிடைக்கவில்லை.
மீண்டும் நான் துவங்கிய இடத்திற்கே வந்து விட்டேன்.
சரிபோகலாம் என்று நினைத்து… என் வருத்தத்தை அந்த வாலிபனுடன் பகிர்ந்து கொண்டேன்.
அவனும் கிளம்ப தயாரானான்.
பின் அவன் சற்று நிதானித்து …
..இன்னொரு பாட்டி இருக்காங்க….அவங்களும் அந்த காலத்தில ஊழியம் செய்தவங்கதான்
…அவங்ககிட்ட கேட்டுப்பாருங்க.ஒருவேளை அவங்களுக்கு இதை பற்றி தெரிஞ்சிருக்கலாம் என்றான்.
அந்த பாட்டியின் இருப்பிடத்தை கேட்டு தெரிந்து கொண்டு ஒருவாறாக பாட்டியை கண்டுபிடித்து
விட்டோம்…
பாட்டிக்கு ஒரு கண்ணில் பார்வையில்லை.
நான் பாட்டியிடம்……. நான் பால் பாஸ்டரை தேடி பாளையங்கோட்டையில் இருந்து வந்திருக்கிறேன்
.என்றேன்.
பாட்டியின் முகம் பிரகாசமாகியது..
யாரு….? பால் பிரசங்கியாரா.?அவர் இறந்துபோய் பல வருடம் ஆச்சுதே… என்றார்கள்..
ஆகா…… கண்டு பிடித்துவிட்டேன்.(மனதிற்குள்..)
அது தெரியும் பாட்டீ.. அவர் புகைப்படம் எதாவது இருக்குமா..? என்று கேட்டேன்.
தன்னிடம் இல்லை..ஆனால் அவர் மகன் திருவைகுண்டத்தில்தான் வாத்தியாராக வேலை பார்க்கிறார்.அவரிடம்
இருக்கும் என்றார்.
மதுரைக்கு போய்விட்டதாக அல்லவா கேள்விபட்டேன் என்றேன்.
மதுரையில் இருப்பது பால் பிரசிங்கியார் மகள்.இங்கேயிருப்பது அவர் இளைய மகன்
என்றார்.
பாட்டி பால் பிரசங்கியார் வாழ்ந்த வீட்டை அடையாளம் காட்டினார்கள்
பாட்டிக்கு நன்றி சொல்லிவிட்டு திருவைகுண்டம் வந்தோம்.
அரசு பேருந்து பணிமனைக்கு கிழக்கு பக்கத்தில் அந்த வாத்தயார் வீடு…
வீட்டில் பால் பாஸ்டர் மூத்த மகன் இருந்தார்.
கதவை திறக்காமலே எங்களுக்கு பதில் சொன்னார்.
எனக்கு கொஞ்சம் கோபம் வந்தது.
நான் அவரிடம்…. நாங்கள் உள்ளே வர வேண்டாம்.
நீங்கள் வெளியே வந்து எங்களிடம் பேசலாம் அல்லவா..?என்று அதட்டினேன்.
வெளியேவந்தார்.
அவரிடம்…. நான் யார் என்பதை விளக்கமாக சொல்லி.. பால் பாஸ்டர் போட்டோ எதாவது
வேண்டும் என்றேன்.
போட்டோ தனியாக இல்லை..
மேலும் வீட்டில் யாரும் இல்லை.இது என் தம்பியின் வீடு என்று கூறி மறுத்து விட்டார்.
நான் அவரிடம் போட்டோ எதுவும் என்னிடம் தர வேண்டாம்.பால் பாஸ்டர் போட்டோவை காட்டுங்கள்
.நாங்கள் தேடும் நபர் அவர்தானா..? என்று உறுதி செய்யவேண்டும் என்றேன்.
அரை மனதுடன் வீட்டிற்குள் அழைத்து சென்றார்.
முகப்பிலேயே பால் பாஸ்டர் படம் மாட்ட பட்டிருந்தது..
அதை பார்த்தவுடன் …
.ஆம் இவர்தான். என சந்தோசமாக கூறினேன்..
.அதற்குள் என் மகன் தன் செல்போனில்
அந்த படத்தை கிளிக்கி விட்டான்.
சரி முடிந்தது…
வரும் போது நான் என் மகனிடம் சொன்னேன்….
நடந்ததை எல்லாவற்றையும் நினைவில் வைத்துக்கொள்…
.நாம் செயல் பட இறங்கினால்தான் கர்த்தர் வழி திறப்பார் என்றேன்..
.அவன் ஒன்றும் சொல்லவில்லை..
ஒருவேளை இன்னும் பல வருடம் கழித்து நான் சொன்னதை.. அவன் தன் மகனிடம் சொல்லலாம்…!;;
(முடிந்தது.)