வியாழன், 2 ஜனவரி, 2025

 

                                                      தேவகி

திருநெல்வேலி இப்போ ரொம்ப மாறி இருந்தது.

சரியாக சொல்ல வேண்டும் என்றால் ஜம்பது வருடத்திற்கு முன் இருந்தது போல இப்போது இல்லை.

என் கார் வண்ணார் பேட்டையில் இருந்து கிழக்கு நோக்கி பயணிக்க வேண்டியது இருந்ததால் வண்டியை திருப்பினேன்..

 

முன்ப  இந்த பைப்பாஸ் ரோடு கிடையாது.

கொக்கிரகுளம் வழியாக அதாவது கலெக்டர் அலுவலகத்திற்கு முன்பாக ஒரு சாலை மேலப்பாளையத்தை நோக்கி செல்லும்.மாற்று சாலை அது ஒன்றுதான் .

மதுரையில் இருந்து வந்த நான் என் காரை சாலையின் ஓரமாக ஒதுக்கி நிறுத்தி கவனித்தேன்.

 வலது புறம்ஆர் எம் கே விஜவுளிக்கடை நிமிர்ந்து நின்று கொண்டிருந்தது.

 அந்த காலத்தில் சுலோசேனா ஆற்றுப்பாலத்தில் இருந்து முருகன் குறிச்சி வரை சாலையின் இரண்டு பக்கமும் மருதமரங்கள் மிகப் பெரியதாக வளர்ந்து விரிந்து நிற்கும்..இடைஇடையே நவால் பழ மரங்களும் நிற்கும்

இன்று மரங்களே இல்லை.

எல்லாமே கட்டடங்களாக மாறி நிற்கிறது.

இந்தியாவில் எல்லா இடத்திலும் கிராமங்கள் நகரங்களாக மாறும் போது இப்படித்தான் ஆகிறது.

திருநெல்வேலி ஒரு பெரிய கிராமம் என்று என் தகப்பனார் சொல்லுவார்.

 

நான் திருநெல்வேலிக்காரன்தான் .

ஆனால் இங்கே நான் வாழ்ந்த காலங்கள் மிக குறைவு. சென்னையில் கொஞ்ச நாள், பின்பு ஹைதராபாத் பின்பு ஒரிசாவில் கொஞ்சநாள் என என் வாழ்க்கையில்  இப்படி இடமாற்றம் நடந்து கொண்டே இருந்தது.

காரணம் என் அப்பாவின் வேலை அப்படி.

 

சென்னையில் இருக்கும் போது அடிக்கடி திருநெல்வேலி வருவோம்.

எங்களுக்கு முருகன் குறிச்சி அடைக்கலாபுறத்தில் ஒரு வீடு இருந்தது. அதை வாடகைக்கு விட்டிருந்தோம்; அந்த வீட்டின் மாடியை எங்களுக்கென்று வைத்துக்கொண்டோம் .

வருடத்திற்கு ஒரு முறை அந்த வீட்டடிற்கு வருவோம். அப்பா மாலையில் என்னை அழைத்துக் கொண்டு ..இலந்தகுளம,; பெருமாள்புரம் என சுற்றுவோம்.

 

அவர் இலந்த குளத்தின் கரையில் நடப்பதற்கு மிகவும் பிரியப்படுவார்.

அவர் சொன்ன ஒரு சம்பவம் எனக்கு இன்னும் நினைவில் இருக்கிறது.

அப்பா அரசாங்க உத்யோகத்தில் பெரிய அதிகாரியாக இருந்தவர்.அவர் ஒரு முறை வெளிநாட்டு பயணத்தில் இருந்தாராம்.அது எந்த நாடு என்று எனக்கு இப்போது நினைவில் இல்லை. அந்த நாட்டில்

ஒரு மாலைப் பொழுதில் சாலையில்அங்கு நடந்து கொண்டிருந்தாராம், அப்போது திடிரென்று மக்கள் அலறி அடித்துக் கொண்டு எதிரே ஓடி வந்தார்களாம்.

ஏதோ கலவரமாம்என்ன ஏதுவென்று விளங்கிக் கொள்ளும் முன்னே எல்லா கடைகளும் அடைக்கப்பட்டு விட்டதாம்.

இவருக்கு என் செய்வது என்றே தெரியவில்லையாம். தனியாளாக ஒரு ஓரமாக ஒரு கடையில் கதவோரம் பதுங்கி கொண்டிருக்கும் போது யோசித்தாராம்

கடவுளே இப்படி ஏதோ ஓரு அன்னிய நாட்டிலா நான் சாக வேண்டும்..ம்

இந்த நேரம் என் ஊரில் இலந்தகுளத்தாங் கரையில் நடந்து சென்றால் எப்படி மகிழ்ச்சியாக இருக்கும்..என நினைத்தாராம்.

இதை சொல்லிச் சொல்லி சிரிப்பார்.

 

எப்படியோ என் அப்பாவுக்கு இலந்தகுளத்து கரையில் நடப்பது ரொம்ப பிடிக்கும். நாங்கள் ஹைதராபாத்திர்க்கு போனபின் நெல்லைக்கு வருவது மிகுந்த சிரமம் ஆகிவிட்டது.

ஆகவே அடைக்கலாபுரம் வீட்டை என் அப்பா விற்றுவிட்டார். ஆனால் அதை நினைத்து ரொம்ப வருத்தப்பட்டார்.

என்னதான் இருந்தாலும் சொந்த ஊரில் ஒரு அடி நிலம் இருப்பதுதான் சரியான விஷயம். அதை விற்றது மிக தவறு என்பார்..

 

நான் மதுரைக்கு என் நன்பனின் மகன் திருமணத்திற்கு வந்தேன்..

எனக்கு தேவகியை பார்க்க வேண்டும் என் ஆசை வந்தது.

அது ஏன் என்று தெரியவில்லை.

தேவகி என் அத்தை பெண்..அவளை சந்தித்த விஷயம் மிக சுவாரஸ்யமானது.

நாங்கள் சென்னையில் இருக்கும் போது ஏதோ காரியமாக என் தகப்பனார் கன்னியாகுமரிக்கு வந்தார்..

அவருக்கு நீணட தூர கார் பயணம் மிகப்பிடிக்கும்..

ஆனால் என் தாயார் அதற்கு தடையாக இருப்பார். ஆகவே என்னையும் அழைத்து; கொண்டு கன்னியாகுமரிக்கு வந்தார்.

கார் கங்கைகொண்டான் வரும்போது.. தம்பி ஸ்ரீவைகுண்டத்தில் என் அக்கா இருக்கிறாள், அவளை பார்த்து பல வருடங்கள் ஆகிவிட்டது.அவளை பார்த்துவிட்டு போகலாம் என்றார்.

இது வரை அந்த அக்காவை பற்றி எங்களிடம் ஒரு போதும் சொன்னதில்லை.

எனக்கு வியப்பாக இருந்தது.

அக்காவா..?

ஆமா உனக்கு அத்தை..

 அத்தையா?

ம் ..மிக பெரிய பணக்காரி..வசதியாக இருக்கிறாள்..

இது வரைக்கும் அவங்களை பற்றி எனக்கு நீங்க சொன்னதில்லையே..?

ஆமா.சொல்வில்லை.அப்பா அமைதியாகி விட்டார்.

எனக்கு தெரிந்த வரை என் தகப்பனாருடன் கூடப் பிறந்தவர்கள் யாரும் இல்லை. அது மட்டும் இல்லை. என் அப்பாவின் சொந்தங்களை பற்றி எனக்கு எதுவும் தெரியாது..அதை பற்றி நாங்கள் எப்போதும் பேசியதும் இல்லை.

அப்பா அமைதியானதும் நான் எதுவும் கேட்கவில்லை. எங்கள் கார் ஸ்ரீவைகுண்டம் ஒடுங்கிய ஆற்றுப் பாலத்தை கடந்து ஓரமாக நின்றது.

 

கார் அருகே வந்த ஒருவரை அழைத்து ஏதோ ஒரு பெயரை சொல்லி அதற்கு வழி கேட்டார். வழிகாட்டியவர் தனது வலது கையை நீட்டி ஏதோ சொன்னார். கார் மேற்கு நோக்கி திரும்பியது.

அது வல்ல நாட்டை நோக்கி போகிறது என்று எனக்கு அப்பா சொன்னார்

ஒரு நான்கு மைல் தூரம் போயிருப்போம். ஒரு வாய்கால் குறுக்கே வந்தது. அதை தாண்டியதும் ஒரு கிராமம் வந்தது.

ஓரமாக கார் நிறுத்தப்பட்டது.

இறங்கினேன். நிறைய சின்னதும் பெரிதுமான வீடுகள். குடிசைகள் இல்லை. கொஞ்ச தூரம் நடந்து போனோம் .மதில் சுவர் போன்ற பெரிய கட்டடம்.

 நடுவாக பெரிய கதவு.

கதவு திறந்திருந்தது.

உள்ளே சென்றோம்.

யாரும் இல்லை. நீண்ட பாதை. இரண்டு புறமும் அறைகள் .எதிர்தாற்போல இரண்டு வாசல்கள் இருந்தன. அருகே போய் நின்றோம்.

அது அறை போல இருந்தாலும் முடிவில்லாமல் நீண்டு கொண்டு போனது.

அந்த வீட்டின் முன் புறம் ஒரு தெருவிலும் பின் புறம் மற்றொரு தெருவிலும் முடிந்தது..

அவ்வளவு நீளம். சுவரில் வேறு சன்னல்கள் இல்லை. நான் அந்த கதவின் அருகே சென்று உற்றுப் பார்த்தேன். கும்மிருட்டாக இருந்தது.

அறையில் நடுவாக ஒரு சிறிய பாதை தெரிந்தது.

அதன் இருபறத்திலும் நெல் குவிந்து சுவர்வரை இருந்தது..

ஒரு மாதிரி கெட்ட வாடை அடித்தது..

யாரது..? என்று குரல் வரவே நிமிர்ந்து பார்த்தேன்.

ஒரு அம்மா மாடியில் இருந்து இறங்கி வந்து கொண்டிருந்தார்கள்..

வெளிச்சம் குறைவாக இருந்தது.

 அருகே வந்ததும் என் தகப்பனாரை பார்த்து.. தம்பி என்று ஓடிவந்து கட்டிப்பிடித்து அழுதார்கள்.

அச்சு அசலாக அந்த பெண் என் தகப்பனாரை உரித்து எடுத்து வைத்தது போல ஒரு உருவ ஒற்றுமை..

 என் தகப்பனார் அழவில்லை..

வா. வந்து உட்கார் என்றாள்..என் அத்தை..

இனி அவளை என் அத்தை என்று சொல்வதுதான் சரியானது..

யாரையே கூப்பிட்டாள். ஒரு நார் கட்டில் கொண்டு வரப்பட்டது.

அதில் நாங்கள் அமர்ந்தோம்.

அத்தை பக்கத்தில் ஒரு மூட்டை இருந்தது அதில் உட்கார்ந்து கொண்டாள்

இது என்ன வீடு ..ஏதோ குடோன் மாதிரி இருக்கிறது.

சோபா இல்லை. நாற்காலி இல்லை. மேசை இல்லை..

 அத்தை தேவகி என்று கூப்பிட்டாள்.

மாடியில் இருந்து ஒரு பெண் இறங்கி வந்தாள்.

இவள்தான் என் கடைசி பெண்.

அப்பா அவளை பார்த்து இங்கே வாம்மா..என்றார்

அவள் தயங்கினாள்..

போம்மா ..இது என் தம்பி.. உனக்கு மாமன்..

என்னத்த சொல்ல நமக்குள்ள போக்கு வரத்து இல்லாமலேயே பேயிட்டு..அத்தை அழுதாள்..

நான் அத்தையை கவனித்தேன் .கழுத்து தாங்காத வண்ணம் பெரிய தங்க வடச்சங்கிலி போட்டிருந்தாள்..

என்னமோடா. நீ கிறிஸ்தவனா ஆயிட்டே அதனாலயோ என்னமோ ஒரு நல்லது பொல்லதுக்கு வராமலேயே போயிட்டோம்.

எங்க சாமி கொடைக்கு ஊரே திரண்டு இருக்கும். பத்தாயிரம் சனத்துக்கு பந்தி நடக்கும். ஆனா பாரு ..என் குடும்பத்தில் இருந்து யாருமே வரது கிடையாதுஉன்ன கூப்பிட்;டாலும் நீ வரமாட்டே..

ம்.. நீ எங்க இருக்கன்னு கூட எனக்கு தெரியாது..பிறகு எங்க கூப்பிட..

 அத்தை இதுக்கும் அழுதாள்இப்போது என்னை பார்த்தாள்.

அப்பா முந்திக் கொண்டார்..இவன் என் மகன் ஜெரேமியா..

என்னது..?அத்தை என் பெரை சொல்ல முயற்சி செய்து  ஏதோ முனுமுனுத்தாள்..

 என்ன பெயரோ.?.இங்க வாடா என் மருமகனே.

என்னை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தாள்..

வெற்றிலை நாற்றம் அடித்தது..

என் அத்தை ஒன்று அழுகிறாள் அல்லது பாசத்தின் உச்சத்துக்கு போகிறாள்..

தேவகியின் கையை என் அப்பா பிடித்துக் கொண்டிருந்தார். அவர் கை மெல்ல நடுங்கிக் கொண்டிருந்தது..

 

போ ..போயி பயினி (பதனீர்) எடுத்துட்டு வந்து மாமாவுக்கு கொடு..தேவகி போய்விட்டாள்

ஜயாவை பற்றி  எதாவது தகல் தெரிந்ததா.? இது என் அப்பா.

தெரியல. சிங்கப்பூர்ல இருக்கிறதா சொல்லிக்கிட்டாங்க. ஒரு சின்ன சண்டையில என் அம்மாவை விட்டுட்டு போயிட்டார்.

அதுக்கப்புறமா நம்பும் படியா எந்த தகவலும் இல்லை..இது அத்தை

எனக்கு ஏதோ புரிந்த மாதிரியும் புரியாத மாதிரியும் இருந்தது..

உன் அம்மாவுக்கு எதாவது தகவல் தெரிந்ததா? (அதாவது என் பாட்டிக்கு )

 இல்லை என்று அப்பா தலையை ஆட்டினார்.

ம் ..இது என்ன மாதிரியான உறவு?;. ஓகே நான் யோசிப்பதை நிறுத்தினேன்

அந்த காலத்து ஆட்களுக்கென்று தனியாக ஒரு நியாயம் உண்டு .இப்போ அதை பற்றி பேசி எந்த பயணும் இல்லை.

 

தேவகி பதநீர் கொண்டு தந்துவிட்டு என்னை கூர்மையாக பார்த்துக் கொண்டிருந்தாள்..

என் அத்தைக்கு ஐந்து ஆண் பிள்ளைகள். தேவகி கடைசியாக பிறந்த செல்லக்குட்டி..

தேவகியின் கடைகுட்டி அண்ணனுக்கும் அவளுக்கும் ஏழு வயது வித்தியாசம்..எப்படியோ நீங்களே கணக்குபோட்டு பார்த்துக் கொள்ளுங்கள்.

அவள் ஐந்து அண்ணன்மார்களுக்கும் திருமணம் நடந்து பிள்ளைகள் இருக்கிறது..

மூன்று அண்ணன் மாடியில் வாழ்கிறார்கள்..

இரண்டு பேர் பக்கத்தில் தனி வீட்டில் இருக்கிறார்கள்

பெயருக்குதான் அது ஒரு வீடு..

வீட்டில் வேறு எந்த வசதியும் கிடையாது..

ஆனால் அனைவரிடமும் கிலோ கணக்கில் தங்கம் இருக்கிறது..நிறைய பேசினார்கள்..எல்லாமே புரியாத புதிராக இருந்தது..

(நான் இடையில் ஒன்றை உங்களுக்கு சொல்ல வேண்டும்அதற்கு மன்னிக்கவும்

என் அத்தையின் கணவர் பனை தொழில் செய்பவர். அவருக்கு ஒரு அண்ணன்..அவர் திருமணம் செய்து கொள்ளாமல் இவர்களோடே இவர்களுக்காகவே உழைத்து காலத்தை கடத்தி முடித்து இருக்கிறார். இரண்டுபேரும் முரட்டு வேலைக்காரர்கள்அதாவது என் மாமா பனை மரத்து மண்டைக்குள்ளே  குறுத்தை பிடித்தபடி தூங்குவாராம்..

வேலை.. வேலை.. அப்படி சம்பாதித்தது தான் ஏக்கர் கணக்காக வயல்களும் மற்ற வசதிகளும்..பிள்ளைகள் வளர்ந்ததும்.எல்லோருக்கும் பெரிய பெரிய கடைகள் திருச்சொந்தூரிலும் ஸ்ரீவைகுண்டத்திலும் வைத்துக் கொடுத்தார்.

பணம் தாராளமாக புழங்கியது. தேவகி அவளுக்கு செய்து வைத்திருக்கும் நகைகளை எனக்கு காட்டினாள் .அது இரண்டு அமுல் பால்பவுடர் டப்பா நிறைய இருந்தது..)

--------------------------------------------------

என் தகப்பனார் கிளம்பினார்.

என் அத்தை விடவில்லை..எங்க அவசரமா போறே..

கன்னியாகுமரி வரை போகணும்.

சரி போ ---போயிட்டு வரும்போது மருமகனை கூட்டிட்டு போ.

ம். சரி என்று கிளம்பினார்.

நான்.அப்பா என்றேன் அவர் கனிவாக என்னை பார்த்தார் , நான் புரிந்து கொண்டேன்..சரி என்றேன்..

அது யார் காதிலும் கேட்கவில்லை.

இரவு வருகிறேன் என்று சொல்லிவிட்டு போய்விட்டார்..

ஐயோ..இது எனக்கு புது மாதிரியான அனுபவம்..

எனக்கு என்று ஒரு நார் கட்டில் போடப்பட்டது.அதில் போய் அமர்ந்தேன்..

தேவகி....அத்தை எல்லோரும் போய்விட்டனர்

ஒரு மணி நேரம் அந்த இருண்ட வீட்டில் கட்டிலில் மல்லாக்க படுத்தபடி மாடியை பார்த்தவண்ணம் இருந்தேன்..ஒரே ஓரு குண்டு பல்பு மஞ்சயாக ஒளியை கசிய செய்தபடி இருந்தது ..வேறு ஆள் அசைவே  அங்கு இல்லை.

திடீரென்று மருமகனே சவுக்கியமா..? அப்பாவ இப்போ பார்த்திட்டுதான் வாரேன்.

ஒரு கறுத்த நபர் வந்து கொண்டிருந்தார்.

மருமகனே என்றால் அவர் எனக்கு மாமனா? அதாவது என் அத்தையின் கணவர்..

ஆறடி உயரம் முருக்கிய மீசை. நரை விழுந்த தலை.ஆள் வாட்ட சாட்மாக இருந்தார்.தேவகியின் தகப்பனா..?

மாலையானது..

பள்ளிக்கு சென்ற பிள்ளைகள் அதாவது தேவகியின் அண்ணன் பிள்ளைகள் வந்து விட்டனர். வந்ததும் விளையாட வெளியே சென்றுவிட்டனர்.

நானும் மெதுவாக அந்த பெரிய முன் வாசலை கடந்து தெருவுக்கு வந்து நின்று சுற்றும் முற்றும் பார்த்தேன்

சற்று தூரத்தில் வாய்க்கால் ஓடிக் கொண்டிருந்தது.

அருகே போகலாம் என்று நினைத்து நடந்தேன்.

வாய்க்காலில் எருமை மாடுகளும் மனிதர்களும் ஒன்று சேரக்குளித்துக் கொண்டிருந்தனர். சிறுவர்கள் மாட்டின் முதுகில் ஏறி சவாரி செய்தனர். மாடு அவர்களை சுமந்த வண்ணம் தண்ணீரில் மூழ்குவதும் பின் வெளியே வருவதுமாக இருந்தது.

இது எனக்கு வியப்பாக இருந்தது..

இந்த கிருமி என்றெல்லாம் சொல்வார்களே அது இந்த பிள்ளைகளிடம் அண்டாதோ என கேள்வி ..

தண்ணீர் அடைக்கும் மடை ஒன்று இருந்தது.

அதன் மேல் உட்கார்ந்தேன்..அருகே ஒரு உயரமான கட்டடம் இருந்தது.அதன் உச்சியில் ஒரு கம்பம் நட்டப்பட்டு அதில் ஒரு ஒலிபெருக்கி குழாய் மாட்டப்பட்டு இருந்தது..

அது ரேடியே நிலையமாம்.. சிலோன் ரேடியோ அந்த குழாய் வழியாக தன் பாடலை ஒலிபரப்பிக் கொண்டிருந்தது.

பாளையங்கோட்டை தெற்குபஜார் முகப்பில் ஒரு நூலகம் இருக்கிறது.

அதன் அருகே கூட ஒரு ரேடியோ கம்பம் முன்பு இருந்தது..ஆல் இண்டியா ரேடியோ எந்நேரமும் கரகரத்தபடி ஒலித்துக் கொண்டே இருக்கும்.

நான் மடையை விட்டு எழுந்தேன்

நேரம் போனதே தெரியவில்லை..

மாலையானது. பின் இரவும் ஆனது. என் தகப்பனார் வரவில்லை.அதே நார் கட்டிலில் எவ்வளவு நேரம் அமர்ந்து இருப்பது.

அந்த காலத்தில் இப்போது போல செல்போன் கிடையாதுஎன் அத்தை வீட்டில் அவ்வளவு வசதி இருந்தாலும் தொலை பேசி கிடையது..

இரவு சாப்பாடு வந்தது.

அங்கே சாப்பாட்டு அறை அதில் மேசை என்று எதுவும் இல்லை.

ஒரு பித்தளை தட்டில்(ஆதற்கு வட்டில் என்றார்கள் ) நிறைய சோறும் மீன் குழம்பும் இருந்தது. பெரிய செம்பில் தண்ணீர் வைத்தர்கள்..

சாப்பாட்டில்; பாதிகூட என்னால் சாப்பிட முடியவில்லை..

அந்த இரவு ஒரு மறக்க முடியாததாக இருந்தது..

 என் கட்டிலுக்கு  அருகே மற்றொரு கட்டில் கிடந்தது..

அதில் என் மாமா வந்து படுத்தார்..

நடுச் சாமத்தில் ஏதேதோ புலம்ப ஆரம்பித்தார்.

தனக்குதானே மிக சத்தமாக பேசிக் கொண்டார்..

அவரே கேள்வி கேட்பார்.பின் அவரே பதில் சொல்வார்..

நான் கவனித்தேன்..மிக சத்தமாகத்தான் அவர் பேசினார்..

ஆனால் மாடியில் இருந்த யாருமே அதை பற்றி கவலைப்பட்டதாக தெரியவில்லை.

ஒருவரும் எட்டிக் கூட பார்க்கவில்லை.

இது தினமும் நடக்கும் சங்கதிபோல..

அவர் சத்தம் மகா பயங்கரமாக கரகரத்து காதை குடைந்தது..

நாளைக்கு நீ சந்தைக்கு போகணும்...ம்..அங்க ஒருவன் வருவான். அவனிடம் மாடு என்ன விலைன்னு கேளு.(அதுவும் இராகம் போட்டு)

சரி கேட்கேன்..(இராகத்தோடு)

அவன் ஐயாயிரம்னு சொல்வான்.நீ நாலாயிரத்துக்கு கேளு..

சரி கேட்கேன்.

ம்.கரகரத்த குரலில் இரவு மூன்று மணிவரை இது நடந்தது.

மிகப் பெரிய சம்பாஷனை..

நான் முதலில் பயந்தேன்..பிறகு என்ன செய்வது.. சப்தநாடியும் ஒடுங்கி அமைதியாகி விட்டேன்

ஒருவாறு விடிந்தது..

அன்று சனிக்கிழமை.. பிள்ளைகள் பள்ளிகளுக்கு செல்லவில்லை. எல்லோரும் மாடியைவிட்டு கீழே இறங்கி வந்து நான் படுத்து இருந்த கட்டிலுக்கு அருகே (அது முற்றம்) விளையாட ஆரம்பித்தனர்..

கவனித்தேன். அது தாயவிளையாட்டு..

கொஞ்ச நேரத்தில் தேவகி கையில் பலகார தட்டோடு வந்தாள்.

இட்லியும் சட்னியும் இருந்தது.

அத்தான் இந்தாங்க.. சாப்பிடுங்க..

அத்தானாஎனக்கு சிலிர்த்தது..

பழைய சினிமா படத்தில் இந்த வார்த்தையை கேட்டிருக்கிறேன்..

தேவகி நீ என்ன சொல்லி என்ன கூப்பிட்ட.?

அத்தான்னு சொன்னேன். ஏன் என்ன ஆச்சு..?

இல்ல இந்த வார்த்தையை புதுசா கேட்கிறேன்..அதான்..

மாமா பையன பின்ன எப்படி கூப்பிடுவாங்க.

வயசுக்கு மூத்தவங்கன்னா அத்தான். இளையவங்கன்னா மச்சான்.

..கே.

தேவகி பக்கத்தில் இருந்த தூனில் சரிந்து உட்கார்ந்தாள். நான் சாப்பிட ஆரம்பித்தேன்.

தேவகி நீ சாப்பிட்டாயிட்டா.?

இல்ல.?

ஏன்சாப்பிடலாம்.

இன்னைக்கி என்ன ஸ்பெஷல்.

எப்பவும் மாதிரி பழைய கஞ்சியும் துவையலும்..

அப்போ இது எப்படி வந்தது. என் தட்டை காண்பித்தேன்.

அதுவா அம்மா உங்களுக்காக சின்னத்துரையை போய் வாங்கிட்டு வரச் சொன்னாங்க.

யார் அந்த சின்னத்துரை.?

எங்க உழவன்.?

சொந்தமா உழவன் இருக்கானா.?

இருக்கானாவா.? இருபத்தி நாலு குடும்பமே இருக்கு.அவங்களுக்கெல்லாம் விடு கட்டி கொடுத்திருக்காங்க.

சொந்த உழவங்க

அப்போ எவ்வளவு சொத்து உங்களுக்கு இருக்கும்..?

 அது தெரியாது. ஆனா நிறைய இருக்கு..

ம்

 தேவகி நேற்று இரவு ஒரு சம்பவம் நடந்தது.

என்னது.

 நான் சொன்னேன்.

அதுவா.. அவள் சாதாரனமாக சிரித்தாள்

எங்க அப்பாவுக்கு செவ்வாய்கிழமையும் வெள்ளிக்கிழமையும் சாமிவரும். அது வந்து கெஞ்சநேரம் பேசிட்டுதான் போகும்..

கொஞ்ச நேரம் பேசிட்டு போகுமா?

அதுவும் சாமியா ? எந்த சாமி..

சாமி பெயரை சொன்னாள்..

 எனக்கு திக்கொன்றது

ஆமா..இது வழக்கமா நடக்கிறதுதான். நீங்க பயந்திட்டடீங்களோ.?

ஆமான்னு சொல்லவா இல்லன்னு சொல்லவா.?

 தெரியல..

எங்களுக்குன்னு சொந்தமா கோயில் இருக்கு தெரியுமா.?

 தெரியாது..

ஆமா.. நீங்க கிறிஸ்டீனா.?

ஆமா..ஏன் கேட்க.?

சும்மாதான்நீங்க எப்படி கிறிஸ்டீனாயிட்டீங்க.?

அது தெரியாது. நான் பிறக்கும்போதே கிறிஸ்டீன்தான்.

அப்போ நல்லா பாடுவீங்களா.?

 ம் சுமாரா பாடுவேன்ஏன் அப்படி கேட்க.?

உங்க சர்ச்ல எல்லோருமா சேர்ந்து

பாடுகிறாங்களே.அதன் கேட்டேன்..வேற எதாவது இன்ஸ்ட்ரூமண்ட் வாசிப்பீங்களா.?

ஆமா..கிட்டார் சுமாரா வாசிப்பேன்..

..தேவகி கண்கள் விரிய பேசினாள்எனக்கு கிட்டார தொட்டு பார்க்கனும்னு ஆசையா இருக்கும்..

ஏன் அப்படி.? எங்க கோயில் கொடைவிழால ஒருதடவ சினிமா கச்சேரி வச்சிருந்தாங்க.

அப்போ திருநெல்வேலியில இருந்து "சில்வர் டோன்ஸ் க்ரூப் "வந்திருந்தாங்க.. அப்போ அதுல பார்த்தேன் செமயா வாசிச்சாங்க..

 

நான் சாப்பிட்டுவிட்டு கை கழுவினேன்

தேவகிவீட்டுக்குள்ளே இருக்கிறது போரடிக்குது. வெளியே போவோமா..? ..போயிட்டு வாங்க.

 நீ கூட வாயேன்..

நானா..?

ஆமா.

அது முடியாது..மத்தவங்க பார்த்தா தப்பா பேசுவாங்க.?

அப்போ இப்போ என்கூட பேசிட்டுதாNனு இருக்கே.

இது வீட்டுக்குள்ள..அதுவுமில்லாமா நீங்க என் மாமா பையன் .இங்க பேசலாம் கிண்டல் பண்ணலாம்..தெருவுல இது சரிப்படாது..

மாமா பையனுக்கு எந்த வரைக்கும் உரிமை இருக்கு.

தேவகி சிரித்தாள்.மற்றவங்கள விட அதிகமா.

அதாவது தொட்டு பேசக்கூடாது..மத்தவங்க இருக்கும் போது கிண்டலா. அதிகமாகவே பேசலாம்..விரசம் இல்லாம பேசணும்..

ம்நீ எது வரைக்கும் படிச்சிருக்கே.

பதினொன்னு..

 அப்புறம் ஏன் படிக்கல..

 படிக்க புடிக்கல..

ஏன் அப்படி சொல்லுற.?

என்ன படிச்சி என்ன பண்ண போறேன்..கடைசில ஒருத்தனுக்கு கல்யாணம் பண்ணி வைக்க போறாங்க..அவ்வளவுதான்..

ம்அந்த வெறுப்புலதான் படிக்கலியா.?

ம்.ஆமா..

நீ படிக்கணுமுன்னா சொல்லு. உன்ன என் அப்பாகிட்ட சொல்லி அதற்கு ஏற்பாடு பண்ணுகிறேன்..

அதெல்லாம் சரிப்பட்டுவராது..

 ஏன் வராது..

உங்க கூட நான் வந்திட்டா அப்புறம் என்ன யார் கட்டுவாங்களாம்.?

அப்படியா..?

ஆமா.ஒன்னு பண்ணலாம் நீங்க என்ன கல்யாணம் பண்ணிகிட்டா இப்படி நடக்கலாம்வெகுளியாய் கலகலத்தாள்...

எனக்கு பக்கென்றதுஎன்ன இப்படி சொல்லிட்டே..யாராவது இத கேட்டா தப்பா நினைக்க மாட்;டாங்களா.?

தேவகி சிரித்தாள்ஐயோ அத்தான்முறை பையன் கிட்ட இது கூட பேசலன்னா எப்படி..?

என்னவோ போ..,வெளியே கூப்பிட்டா வரமாட்டேங்கிற.

அதுதான் உங்களுக்கு கோபமா? நான்தான் கூடவே வாரேன்கிறேனே? தேவகி மீண்டும் சிரித்தாள்..

அப்போ பார்த்து பக்கத்து ரேடியோ ரூம்மில் இருந்து ஏதோ பாட்டுவந்தது..

தேவகி பழைய சினிமா பாட்டுல அத்தான் என்னத்தான்னு ஒரு பாட்டு இருக்குல்ல..

ஆமா..

உங்க வீட்ல ரேடியோ இருக்கா.

இல்ல..ஏன் வாங்கல..நீ வாங்கித்தரச் சொல்லி கேட்கலாமே..

ம் ..சினிமா பாட்ட கேட்டு கெட்டு போவேணாம்அம்மா சொல்றாங்க..

அப்படியா சொன்னாங்க..

ஆமா..ஆனா உண்மை அது இல்ல.

அப்புறம்.

ரேடியோ வாங்க இருநூறு ரூபாய் செலவாகிடுமே..தேவகி சிரித்தாள்..

என்ன பாட்டு சொன்னீங்கம்

அத்தான்என்னத்தான்..

அதவா..

அத்தான் என்னத்தான்

அவர் என்னைத்தான்..

எப்படி சொல்வேன் அதை.

அவள் பாடியது எனக்கு சிலோன் ரேடியோ பாடியது போல இருந்தது

தேவகி அந்த பாடல்  பாடியபடி கைகளால் அபிநயம் பிடித்தாள்.

எனக்கு சிரிப்பாக வந்தது..

பெண்கள் உலகம் தனித்துவமானது..வீட்டிற்கு உள்ளும் வீட்டிற்கு வெளியிலும் வேறு வேறு விதமாக வாழ வேண்டிய நிர்ப்பந்தம் அவர்களுக்கு இருக்கிறது..

அது இந்த நாட்டில் உள்ள நடைமுறையினால் வந்ததோ..?

தேவகி உறவுக்குள் திருமணம் சரியானது இல்லைங்கிறாங்களே..

அப்போ எப்படி இவ்வளவு ஜனத்தொகை வந்தது..அதை பற்றி எனக்கு சரியா தெரியாது..ஆனால் உறவுக்குள் திருமணம் பெண்களுக்கு பயத்தை கொடுக்காது..

உதாரணமா எங்க வீட்ல..அதாவது இங்க உங்களால ஒரு வருஷம் இருக்க முடியுமா..?

ரொம்ப கஷ்டம் தேவகி..

ஏன் .அப்படி என்ன கஷ்டம்..?

நீ தப்பா நினைக்காதே. இத வீட்ல அடிப்படை வசதியே இல்லையே.

ம்..அப்போ நாங்க எல்லாம் எப்படி வாழுகின்றோம்.

நீங்க இதுக்கு பழகிட்டீங்க..

அதாவது இதைவிட அதிக வசதியான ஒன்றை நாங்கள் பார்க்கவில்லை என்கிறீங்க அதானே..

 அப்படியும் சொல்லாம்.

பெண்களுக்கு கூட கல்யானம் பண்ணி போகக் கூடிய இடம் எப்படி இருக்குமோ யார் கண்டது.?.எப்ப எப்படி இருந்தாலும் அங்க போய் வாழத்தானே வேண்டும்..

 சொந்தத்தில கல்யானம் பண்ணினா எல்லாமே தெரிந்த முகமா இருக்கும்..அதனால ஆரம்பத்தில கஷ்டமா இராது .போகப்போக எல்லாமே பழகிடும்உதாரணமா உங்க அப்பாவ பார்த்தா எங்க அம்மா முகச்சாட அப்படியே இருக்கிறது..அப்போ எனக்கு அம்மா கூட இருக்கிற மாதிரி ஒரு உயர்வு வரும்..இது வெளி உறவைவிட நல்லது தானே..

ஆனா பெண்கள் வாழ்க்கையில் எல்லாமே அடுத்தவர்கள் எடுக்கும் முடிவே கடைசி வரை நடக்கிறது..

 

உனக்கு மாப்பிள்ளை பார்க்கிறார்களா தேவகி.?

ஆமா ..இராஜபாளையத்தில் ஒரு பணக்கார பையனை பார்த்திருக்காங்க இன்னும் முடிவாகல..

உனக்கு பிடிச்சிருக்கா.?

ம்..நல்லாத்தான் இருக்கான்..

எனக்கு ஏனோ அந்த வார்த்தை கேட்க கொஞ்சம் கசப்பா இருந்தது.. ஏன்னு தெரியல..

 தேவகி நல்ல விபரமான பெண் என்பதை புரிந்து கொண்டேன்..எனக்கு அவள் மீது காதல் இல்லை. ஆனால் அபரிதமான பாசம் இருந்தது..

இப்படி ஒரு சொந்தம் எனக்கு அதிக மகிழ்ச்சியை கொடுத்தது என்பது உண்மைதான்..மதியம் வாக்கில் என் அப்பா வந்துவிட்டார்.

போன இடத்தில் வேலை தாமதமாகி விட்டது என்றார். நாங்கள் புறப்பட்டோம்.வழக்கம் போல என் அத்தை அழுது வழியனுப்பினாள்

தேவகி அழவில்லை .ஆனால் மகிழ்ச்சியாகவும் அவள் இல்லை.

எனக்கு அவளை விட்டு பிரிவது வருத்தமாக இருந்தது..

வந்துவிட்டோம்..

இன்று மீண்டும் அங்கே போக வேண்டும் என விருப்பம் வந்தது ஏனோ?

கிட்டதட்ட நாற்பது வருடங்களுக்கு மேல ஆகிவிட்டது. தேவகி எங்கே இருப்பாள்.?

அத்தை நிச்சயம் உயிரோடு இருக்க வாய்ப்பு இல்லை.

 அந்த வாய்க்கால் .அந்த ரேடியோ நிலையம்.அந்த ஒலிபெருக்கி.இருந்தாலும் சிலோன் ரேடியோ இப்போ இல்லையே..

எனக்கு போகனுமா ?என்கிற பயம்.. வந்தது.

என் கார் கருங்குளம் தாண்டி சென்று கொண்டிருந்தது. இந்த இடங்கள் அதிக மாற்றம் இல்லை. விவசாயம் நல்ல முறையில் நடப்பதால் மாற்றம் நடக்காமல் இருக்கலாம்..

ஸ்ரீவைகுண்டம் ஆற்று பாலத்திற்கு முன் போலிஸ் ஸ்டேஷன் வரும் அதற்கு முன் ஆற்றாங்கரையில்  மரங்கள் அடர்ந்து இருக்கும் அதில் வவ்வால்கள்; தலைகீழாக தொங்கி கொண்டிருக்கும்.இப்போதும் அப்படி இருக்கிறதா என பார்த்தேன் ...

இருக்கிறது.அதில் மாற்றம் இல்லை.

என் கார் ஆற்றுப்பாலத்தின் அருகே வந்தது.ஆற்றை கடக்க இப்போது புதிய பாலம் கட்டப்பட்டிருக்கிறது..

அருமை.

புதிய பாலத்தின் வழியாக ஸ்ரீவைகுண்டம் ஊரை நோக்கி காரை ஓட்டினேன்

ஊர் நிறைய மாற்றத்தோடு காணப்பட்டது.

விசாரித்தேன் .மீண்டும் மேற்கு நோக்கி ஒரு சாலையில் பயணிக்க வேண்டும் என்றார்கள். முன்பு இரண்டு பக்கமும் வயல்களாக இருந்த நிலம் இப்போது இடையிடையே விடுகள் காணப்பட்டது.. ஆனாலும் முற்றிலும் அழியவில்லை..

 நல்ல விஷயம்தான்

வயல்வெளியில் வீடு கட்டுவது  எதிர்கால சந்ததிக்கு செய்யும் துரோகம்..

சாலை போய்க்கொண்டே இருந்தது..

முடிவாக ஒரு வாய்க்கால் குறுக்கே வந்தது. அப்பாடா..வந்தாகிவிட்டது.அதே மடை .பக்கத்தில் அந்த ரேடியோ நிலையம் இருக்கிறதா என்று பார்த்தேன்.

இருந்தது.

ஆனால் உருக்குலைந்து போய் .சிதைந்து போய் இருந்தது. மேல் புறத்தில் ஒலிபெருக்கி இல்லை.அதை தாங்கி நிற்கும் கம்பம் மொட்டையாக இருந்தது..

நகர்ந்தேன்காரை ஓரமாக நிறுத்திவிட்டு தேவகி வீடு..இங்கேதான் இருந்தது..

வரிசையாக நிறைய வீடுகள்..சிறு பையன்கள் விளையாடிக் கொண்டிருந்தனர்..

 என் அத்தை பெயர் நினைவில்லை.

.மாமா பெயர்..அதற்கு வாய்ப்பே..இல்லை

எப்படி ஆரம்பப்பிப்பது. யாரிடம் கேட்பது. அந்த வரிசை வீடுகளை கவனித்தேன் ஒன்று புரிந்தது..

என் அத்தையின் நீள விட்டை ஒரு பக்க சுவர் இடிக்கப்பட்டு அது பல அறைகளாக பிரிக்கப்பட்டு தனித்தனியாக வீடாக்கப்பட்டிருக்கிறது..

 சரி இவர்களிடம் விசாரிக்கலாம்..

பாத்திரம் கழுவிக் கொண்டிருந்தாள் ஒரு பெண்.

அம்மா இங்கே தேவகின்னு ஒரு அம்மா இருந்தாங்க..அதுவும் சுமார் நாற்பது வருடத்திற்கு முன்..

அவங்கள பத்தி தெரியுமா.?

தெரியதுயா.. நாங்க வாடகைக்கு இருக்கோம்..

நீங்க அந்த தெருவில் போய் கேளுங்க அங்கதான் பழைய ஆளுங்க இருக்காங்க.

..அது உழவர்கள் குடியிருந்த தெரு.. கே.. இது சரிதான்

ஒரு வீட்டுக் கதவை தட்டினேன்.உள்ளே திரைப்பட பாடல் டிவியில் ஓடிக்கொண்டிருந்தது. ஓரு யுவதி வந்தாள்.

 எனக்கு தெரியாது.எனக்கு கல்யாணம் ஆகி இங்க வந்து இரண்டு மாதம்தான் ஆகுது. நீங்க எங்க மாமனார்ட்ட கேளுங்க.

அவரு எங்க..

ஸ்ரீவைகுண்டம் போயிருக்காரு..

வேற பழைய ஆளுங்க யாராவது இங்க இருக்காங்களா..?

தெரியல நீங்க அங்கிட்டு போய் பாருங்க..எங்கிட்டு ..கையை நீட்டி திசை காட்டினாள்.

நகர்ந்தேன்..

ஒருவரும் கண்ணில் படவில்லை.

எல்லா வீட்டுக் கதவுகளும் மூடப்பட்டு இருந்தது.

நாகரீகம் இங்கேயும் வந்து விட்டது.

பழையபடியும் வாய்கால் அருகே வந்தேன்என்ன செய்வது..?

வாய்கால் அழுக்காக இருந்தது. ஒருவரும் அங்கு குளிக்கவில்லை. அந்த பக்கத்தில் அந்த அழுக்கு தண்ணீரில் ஒருவர் மீன ;பிடித்துக் கொண்டிருந்தார். அவரிடம் போய் கேட்கலாம்.

அவர் அருகே போய் நின்றேன்.அவர் என்னை அன்னாந்து பார்த்தார்..

வயதானவர்ஐயா இந்த மீனை என்ன செய்ய போறிங்க.?

 விற்கணும்..ஏன்

ஒன்னும் இல்ல இத வித்தா எவ்வளவு கிடைக்கும்.?

என்ன ஒரு நூத்தம்பது ரூபா கிடைக்கும்..

நான் இருநூறு ரூபாயை எடுத்து அவர் ககைளில் கொடுத்தேன்.

ஓட்டைப்பல் தெரிய சிரித்தார். கொஞ்சம் பொறுங்க இன்னும் ஐஞ்சாறு மீனை பிடித்துதாரேன்

இந்த மீனை நீங்களே விற்று அதையும் எடுத்துக்கோங்க..எனக்கு ஒரு விபரம் தெரியணும் என்றேன்.

அவர் தூண்டிலை கரையில் வைத்துவிட்டு என்னை நிமிர்ந்து பார்த்தார்.அப்போது கவனித்தேன் எப்படியும் அவருக்கு வயது என்பது இருக்கும்..

நான் அந்த வீட்டை காட்டினேன்

அவர் புரிந்து கொண்டார். ..பண்ணை வீடா..?

எனக்குள் ஒளிர்விட்டது..

ஆமா அவங்கள எங்க.. இப்போ இருக்காங்களா.?

 அவர் குனிந்து கண்களை கசக்கி கொண்டார். கொஞ்ச நேரம் குனிந்தபடியே இருந்தார்.

பின் நிமிர்ந்து என்னனைப் பார்த்தார். நீங்க அவுகளுக்கு என்ன வேணும்..?

அந்த அம்மா எனக்கு அத்தை உறவு..

ம்..எல்லாரும் போயிட்டாங்க..

போயிட்டாங்கன்னா.?

அவங்க மகன்கள்ல ஒருத்தர பக்கத்து ஊர்காரங்க வெட்டி கொண்ணுட்டாங்க..

 அடப்பாவமே..ஏன்

இந்த கோயில் கொடையில ஒரு சின்ன பிரச்சணை..அதான்.

அதுகாகாக கொலை செய்யணுமா.?

அது சாதிபிரச்சணையில பேய் நின்னுது..

இவங்களும் ஆளாளுக்கு அருவா எடுத்துக்கிட்டு புறப்பட்டாங்க.. அந்த அம்மா மகன்கள்ல மூத்தவரு நல்லா விபரமானவரு..கொலைக்கு கொலைன்னா இது முடிவில்லாம போய்கிட்டே இருக்கும்.அதனால நாம ஊரை காலிபண்ணிட்டு முதல்ல போயிடுவோம்..அப்படின்னு எல்லா சொத்தையும்" தவுட்டுக்கு" வித்த மாதிரி வித்துட்டு போயிட்டாங்க..

எங்க போயிட்டாங்க.?

 அது தெரியாது..வடக்கன்னு சொன்னாங்க..மெட்ராசா இருக்குமுன்னு நினைக்கேன்..

 அந்த அம்மாவுக்கு ஒரு பொண்ணு இருந்ததே அது என் ஆச்சி.?

அந்த பொண்ணா..அதுக்கு கல்யாணம் ஆயிட்டு.கல்யாணம் தடாபுடால்ல நடந்து. பந்தி மட்டுமே ஒரு வாரம் நடந்தது..

விடாம மூனு வேளையும் சாப்பாடு நடந்தது. அதுக்கப்புறம்தான் இந்த கொடுமை நடந்தது..

ஓஹோ..அந்த பொண்ண எந்த ஊர்ல கட்டி கொடுத்தாங்க..

அது தெரியாதய்யா.. அவங்க ஊரவிட்டு போனதுக்கு அப்புறமா யார் யாருலாமோ இங்க குடியேறி இருக்காங்க.

பழைய ஆளுங்க முக்கால் வாசிப்பேர் இப்போ உசுரோடேயே இல்ல. ..நாற்பது வருசமுன்னா சும்மாவா..? ஒரு தலை முறையே மாறி இருக்குமே.

 உண்மைதான்..எனக்கு இனி இங்க வேலை இல்ல..

 என் வயதே அறுபதை கடந்து எழுபதை தொட்டு நிற்கிறது. இப்போது அவளை ஏன் தேடி வந்தேன் என்பது எனக்கு விளங்கவில்லை. சே.. என்ன ஒரு மாற்றம்..

தேவகி..இப்போது பாட்டியாகி இருப்பாள்.

உயிரோடு இருப்பாளா.? தெரியவில்லை..

மனதிற்குள் ஒரே இருட்டாக தெரிந்தது..

நான் என் காரில் மெதுவாக திரும்பினேன்

சாலைகள் வயல்கள் ஒன்றும் கண்ணுக்கு தெரியிவில்லை.. வாழ்க்கையில் சில ஆட்களை மீண்டும் காண வேண்டும் என ஆசை ஒரு மனிதனுக்கு அவன் கடைசி காலங்களில் வருவது சகஜம்தானோ..என்னவோ தெரியவில்லை..

-------------------------------------------------------------------------------------------------

பிரசங்கி 2:16.

 மூடன் என்றாலும் ஞானியென்றாலும் என்றைக்கும் நினைவில் இருப்பதில்லை; இப்பொழுது இருக்கிறதெல்லாம் வருங்காலத்தில் மறக்கப்பட்டுப்போம்; மூடன் எப்படிச் சாகிறானோ அப்படியே ஞானியும் சாகிறான்

--------------------------------------------------------------------------------------------------------------

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக